திரு அவதாரப் படலத்தின் தொடர்ச்சியாக கலைக்கோட்டு முனிவனின் வரலாற்றை தயரதனிடம் வசிட்டன் கூறுதலும், கலைக்கோட்டு முனிவனை அழைக்க தயரதன் உரோமபதன் நாட்டுக்கு சொல்லுதலும் கலைக்கோட்டு முனிவர் அயோத்திக்கு புறப்படுவதையும் இப்பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது


கலைக்கோட்டு முனிவனின் வரலாற்றை வசிட்டன் உரைத்தல்

'புத்து ஆன கொடு வினையோடு அருந் துயரம் போய் ஒளிப்ப,-புவனம் தாங்கும்
சத்து ஆன குணம் உடையோன், தயையினொடும் தண் அளியின் சலை போல்வான்,
எத்தானும் வெலற்கு அரியான், மனுகுலத்தே வந்து உதித்தோன், இலங்கும் மோலி
உத்தானபாதன்,-அருள் உரோமபதன் என்று உளன், இவ் உலகை ஆள்வோன்;

புற்றுப் போலப் பெருகும் கொடிய வினைகளும், அவற்றால் விளையும் அரிய துன்பங்களும் சென்று நீங்க நாட்டைக் காத்து ஆட்சி புரியும் மிக உண்மையான குணம் உடையவனும், தயைக்கும் தண்ணளிக்கும் இருப்பிடம் போன்றவனும், எம்முறையிலும் பகைவரால் வெல்ல அரியவனும், மனுவின் குலத்தில் பிறந்தவனும், ஆனவிளங்கும் மணிமுடி தரித்த உத்தான பாதன் என்னுமரசன் பெற்ற மகனான உரோம பதன் என்னும் பெயர் பெற்ற இவ்வுலகத்தை எல்லாம் ஆள்கின்ற அரசன் ஒருவன் இருக்கிறான்.

'அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில் நெடுங் காலம் அளவது ஆக,
மின்னி எழு முகில் இன்றி வெந் துயரம் பெருகுதலும், வேத நல் நூல்
மன்னு முனிவரை அழைத்து, மா தானம் கொடுத்தும், வான் வழங்காது ஆக,
பின்னும், முனிவரர்க் கேட்ப, "கலைக்கோட்டு-முனி வரின், வான் பிலிற்றும்" என்றார்.

அந்த உரோமபத மன்னன் காத்து ஆட்சி புரியும் அந்தச் சிறந்த நாட்டில் நீண்ட கால அளவாக, மின்னி எழுகின்ற மேகங்கள் இல்லாமையால் கொடிய துன்ப நோய் மிகவே அந்த அரசன், வேதங்களையெல்லாம் கற்றறிந்த முனிவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு வேதங்களில் கூறியபடி சிறந்த தானங்களைக் கொடுத்த போதும் மழை பெய்யாது போகவே மறுபடியும் முனிவர்களை அழைத்து மழை பெய்விக்க வழி யாதெனக் கேட்க கலை கோட்டு முனிவன் வந்தால் இங்கு மழை பெய்யும் என்றார்கள்.

'"ஓத நெடுங் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும்
கோது இல் குணத்து அருந் தவனைக் கொணரும் வகை யாவது?" எனக் குணிக்கும் வேலை
சோதி நுதல், கரு நெடுங் கண், துவர் இதழ் வாய், தரள நகை, துணை மென் கொங்கை,
மாதர் எழுந்து, "யாம் ஏகி, அருந் தவனைக் கொணர்தும்" என, வணக்கம் செய்தார்.

குளிர்ந்த பெரிய கடலை ஆடையாகஉடைய இவ்வுலகிலே வாழும் மனிதர்களைஎல்லாம் விலங்குகள் என்றே நினைத்திருக்கின்ற குற்றமற்ற குணங்களை உடைய அரிய தவத்தை உடைய அந்த முனிவனை இங்கு அழைத்து வரக்கூடிய வழி யாது என்று சிந்திக்கும் போது ஒளி பொருந்திய நெற்றியையும் கருமையான நீண்ட கண்களையும் பவளம் போன்ற உதடுகளையும் கொண்ட வாயையும் முத்துப் போன்ற பற்களையும் மெத்தென்ற இரு தனங்களையும் உடைய பெண்கள் அந்த அவையிலே எழுந்து நின்று. நாங்கள் சென்று அத தவமுனியை அழைத்து வருவோம் என்று வணங்கிக் கூறினர்.

ஆங்கு, அவர் அம் மொழி உரைப்ப, அரசன் மகிழ்ந்து, அவர்க்கு, அணி, தூசு, ஆதி ஆய
பாங்கு உள மற்றவை அருளி, "பனிப் பிறையைப் பழித்த நுதல், பணைத்த வேய்த் தோள்,
ஏங்கும் இடை, தடித்த முலை, இருண்ட குழல், மருண்ட விழி, இலவச் செவ் வாய்ப்
பூங்கொடியீர்! ஏகும்" என, தொழுது இறைஞ்சி, இரதமிசைப் போயினாரே.

அங்கு. அம்மகளிர். அச்சொற்களைச் சொல்ல அதைக் கேட்ட மன்னன் மகிழ்ந்து அவர்களுக்கு வேண்டிய அணிகலன்கள் ஆடை மற்றும் தேவையானவைகளைக் கொடுத்து குளிர்ந்த பிறை மதியைப் பழித்த நெற்றி பருத்த மூங்கிலை ஒத்த தோள்கள் நுண்ணிய இடை, பருத்த தனம்கரிய கூந்தல், மான்போல மருண்ட கண்கள், இலவம் பூவைப் போலச் சிவந்த வாய் ஆகிய உறுப்பு நலம்வாய்ந்த மலர்க்கொடி போன்றவர்களே சொல்லுங்கள் என்று கூற அரசனைப் பணிந்து வணங்கித் தேர் ஏறிச் சென்றனர்.

'ஓசனை பல கடந்து, இனி ஒர் ஓசனை
ஏசு அறு தவன் உறை இடம் இது என்றுழி,
பாசிழை மடந்தையர், பன்னசாலை செய்து,
ஆசு அறும் அருந் தவத்தவரின் வைகினார்.

மன்னனிடம் விடைபெற்றுச் சென்ற அப்பெண்கள் பல ஓசனை கடந்து சென்று குற்றமற்ற தவ முனிவன் வாழும் இடம் இதுவாகுமென இனி ஒரு யோசனை தூரம் தானிருக்கிறது என்று கூறப்படும் இடத்தில் தழை, குழை, கொம்புகளால் உறைவிடமமைத்து பசிய அணிகலன்களை அணிந்த அப்பெண்கள் குற்றமறுத்த அரிய தவத்தினர் போல அங்கு வாழத் தொடங்கினர்.

'அருந் தவன் தந்தையை அற்றம் நோக்கியே,
கருந் தடங் கண்ணியர், கலை வலாளன் இல்
பொருந்தினர்; பொருந்துபு, "விலங்கு எனாப் புரிந்து
இருந்தவர் இவர்" என, இனைய செய்தனர்.

அரிய தவத்தை உடைய கலைக் கோட்டு முனிவனது தந்தையாகிய விபாண்டகர் இல்லாத சமயம் பார்த்து கரிய, அகன்ற கண்களை உடைய அப்பெண்கள் எல்லாக் கலைகளிலும் வல்லவராகிய அம்முனிவரின் குடிலை அடைந்தனர். அங்ஙனம் அடைந்த போது மனிதர்களை விலங்கினங்களோடு ஒப்ப மதித்து இருக்குமவன், முனிவர்களே இவர்கள் எனக் கருதிப் பின்வருமாறு செய்யத் தொடங்கினான்.
'அருக்கியம் முதலினோடு ஆசனம் கொடுத்து,
"இருக்க" என, இருந்த பின், இனிய கூறலும்,
முருக்கு இதழ் மடந்தையர் முனிவனைத் தொழா,
பொருக்கென எழுந்து போய், புரையுள் புக்கனர்.

அருக்கியம் முதலான உபசரிப்புகளோடு அமர்வதற்கு உரிய ஆசனமும் தந்து அமர்வீராக என முனிவன் கூற அந்த மகளிர் அமர்ந்ததன் பின்னர்இனிய உரையால் முகமன் கூறி வரவேற்கமுருக்கம் பூப் போன்ற உதடுகளை உடைய அப்பெண்கள் அந்த முனிவனைத் தொழுது பின்பு விரைந்தெழுந்து சென்று தமது பன்ன சாலையை அடைந்தனர்.

'திருந்து இழையவர், சில தினங்கள் தீர்ந்துழி,
மருந்தினும் இனியன வருக்கை, வாழை, மாத்
தருங் கனி பலவொடு, தாழை இன் கனி,
"அருந் தவ, அருந்து" என, அருந்தினான் அரோ.

திருந்திய அணிகலன்களை அணிந்திருப்பவர்களாகிய அப்பெண்கள் சில நாட்கள் சென்ற பிறகு அமுதத்தை விட இனிமையாகிய பலா, வாழை, மா என்னும் மூவகை மரங்களும் தருகின்ற பழங்கள் பலவுடனே தேங்காய்களையும் கொணர்ந்து அரிய தவமுனிவரே ! இவற்றை அருந்துவீராக என வேண்ட அம்முனிவனும் அவற்றை உண்டான்.

'இன்னவன் பல் பகல் இறந்தபின், திரு
நல் நுதல் மடந்தையர், நவை இல் மாதவன் -
தன்னை, "எம் இடத்தினும், சார்தல் வேண்டும்" என்று,
அன்னவர் தொழுதலும், அவரொடு ஏகினான்.

இவ்வாறு பல நாட்கள் சென்றபின் அழகிய நல்ல நெற்றியை உடைய அப்பெண்கள் குற்றமில்லாத சிறந்த தவத்தை உடைய அக்கலைக் கோட்டு முனிவனை எங்கள் இருப்பிடத்துக்கும் தாங்கள் எழுந்தருள வேண்டும் என்று கூறி அம்மகளிர் வணங்கி வேண்டிட அம்முனிவனும் அவர்களுடன் சென்றான்.

'விம்முறும் உவகையர், வியந்த நெஞ்சினர்,
"அம்ம! ஈது, இது" என, அகலும் நீள் நெறி,
செம்மை சேர் முனிவரன் தொடரச் சென்றனர்;-
தம் மனம் என மருள் தையலார்களே.

விளங்கிப் பெருகும் மகிழ்ச்சி உடையவராயும்பெருமிதங் கொண்ட மனத்தினராயும் உள்ள மருண்ட கண்களை உடைய அம்மாதர்கள் சிறந்த அம்முனிவன் அவர்களைத் தொடர்ந்து வர அகன்று நீண்ட அந்த வழியிலே எங்கள் இருப்பிடம் இதுதான் இதுதான் என்று வேகமாகச் செல்லும் தமது மனம் போலச் சென்றார்கள்.

'வளநகர் முனிவரன் வருமுன், வானவன்
களன் அமர் கடு எனக் கருகி, வான் முகில்,
சள சள என மழைத் தாரை கான்றனகுள
னொடு நதிகள் தம் குறைகள் தீரவே.

கலைக் கோட்டு முனிவன் அந்தவளம் பொருந்திய நகருக்கு வரும் முன்னே பெரு மேகங்கள் சிவபிரானுடைய கழுத்தில் தங்கியுள்ள நஞ்சு போலக் கருநிறம் கொண்டு குளங்களும், ஆறுகளும் குறை தீரும்படியாக மழைத் தாரைகளைச் சளசள என்ற ஒலியுடன் பொழிந்தன.

'பெரும் புனல், நதிகளும் குளனும், பெட்பு உற,
கரும்பொடு செந்நெலும் கவின் கொண்டு ஓங்கிட,
இரும் புயல் ககன மீது இடைவிடாது எழுந்து
அரும் புனல் சொரிந்து போது, அரசு உணர்ந்தனன்.

பெய்த மழையால் பெருகிய வெள்ள நீரால், நீரோடும் ஆறுகளும், நீர் நிறைந்த குளங்களும் மக்கள் விரும்புமாறும் கரும்பும், செந்நெற் பயிரும் அழகு கொண்டு செழித்தோங்கவும் பெரு மேகங்கள் வானவீதியில் எழுந்து நின்று அரிய மழைப் பெருக்கினை இடைவிடாமல் சொரிந்த வேளையில் அந்த நாட்டு மன்னனான உரோமபதன் முனிவரது வருகையைத் தெரிந்து கொண்டான்.

"காமமும், வெகுளியும், களிப்பும், கைத்த அக்
கோமுனி இவண் அடைந்தனன் கொல்-கொவ்வை வாய்த்
தாமரை மலர் முகத் தரள வாள் நகைத்
தூம மென் குழலினர் புணர்த்த சூழ்ச்சியால்?"

காமம், வெகுளி, மயக்கம் ஆகிய மூன்றினையும் வெறுத்து நீக்கிய முனிவர்களுக்கெல்லாம் தலைவனாகிய அந்தக் கலைக் கோட்டு முனிவன் கொவ்வைக் கனி போன்ற வாயையும், தாமரை மலர் போன்ற முகத்தையும் முத்துப் போன்ற ஒளிபொருந்திய பற்களையும் அகிற் புகையூட்டிய மென்மையான குழலையும் உடைய அப்பெண்கள் செய்த சூழ்ச்சியினால் இங்கு வந்து சேர்ந்தனன் போலும்.

'என்று எழுந்து, அரு மறை முனிவர் யாரொடும்
சென்று, இரண்டு ஓசனை சேனை சூழ்தர,
மன்றல் அம் குழலியர் நடுவண், மா தவக்
குன்றினை எதிர்ந்தனன் - குவவுத் தோளினான்.

என்று நினைத்த திரண்ட தோள்களை உடைய அந்த மன்னன் (உரோமபதன்) நாற்பெரும் படையும் தன்னைச் சூழ்ந்து வர எழுந்து புறப்பட்டு சென்று மணமும் அழகும் உடைய கூந்தலை உடையவர்களான பெண்களின் நடுவே சிறந்த தவமலை போன்றவராகிய கலைக் கோட்டு முனிவனைக் கண்டான்.

'வீழ்ந்தனன் அடிமிசை, விழிகள் நீர் தர்
"வாழ்ந்தனெம் இனி" என, மகிழும் சிந்தையான்,
தாழ்ந்து எழு மாதரார் தம்மை நோக்கி, "நீர்
போழ்ந்தனிர் எனது இடர், புணர்ப்பினால்" என்றான்.

அம்முனிவனைக் கண்ட மன்னன் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிய அம்முனிவரின் திருவடிகளில் வணங்கி எழுந்து இனி யானும் எனது நாட்டு மக்களும் வாழ்வு பெற்றோம் என்று கூறி மகிழ்ச்சிமிக்க மனத்தையுடைய மன்னவன் தன்னை வணங்கி எழுந்து நிற்கும் அந்தப் பெண்களைப் பார்த்து நீங்கள் உங்கள் உபாயத்தினால் எனது பெருந்துன்பத்தைப் போக்கிவிட்டீர்கள் என்று கூறினான்.

'அரசனும் முனிவரும் அடைந்த ஆயிடை,
வர முனி, "வஞ்சம்" என்று உணர்ந்த மாலைவாய்,
வெருவினர் விண்ணவர்; வேந்தன் வேண்டலால்,
கரை எறியாது அலை கடலும் போன்றனன்.

உரோமபத மன்னனும் அவனைச் சூழ்ந்து வந்த முனிவர்களும் தன்னை வந்தடைந்த காலத்தில் சிறந்த முனிவனாகிய கலைக்கோட்டு முனிவன்தன்னை இங்கு அழைத்து வந்து ‘வஞ்சகச் செயல்’ என்று தெளிந்த போதிலே தேவர்கள் அஞ்சி நடுங்கினர் அரசன் வேண்டிக் கொண்டதால்கரையை மோதி அழித்துவிடாது அலைக்கும் கடல் போல அந்த முனிவன் கட்டுப்பட்டிருந்தான்.

'வள் உறு வயிர வாள் மன்னன், பல் முறை,
எள்ள அரு முனிவனை இறைஞ்சி, யாரினும்
தள்ள அருந் துயரமும், சமைவும், சாற்றலும்,
உள் உறு வெகுளி போய் ஒளித்த தாம் அரோ.

கூர்மை பொருந்திய வாளை உடைய அம்மன்னன் பலமுறையும் இகழ்தற்கரிய அந்த முனிவனை வணங்கி யாராலும் போக்க முடியாத மழை இன்மையாகிய துன்பத்தையும் அத்தகைய துன்பம் முனிவன் வருகையால் நீங்கியதனையும் விரிவாகச் சொல்லவும் அம் முனிவனது உள்ளத்தே உண்டான கோபம் நீங்கி மறைந்தது.

'அருள் சுரந்து, அரசனுக்கு ஆசியும் கொடுத்து,
உருள் தரும் தேரின்மீது ஒல்லை ஏறி, நல்
பொருள தரும் முனிவரும் தொடரப் போயினன் -
மருள் ஒழி உணர்வுடை வரத மா தவன்.

உள் எழுந்த சினம் நீங்கிய அம்முனிவன் அருளைச் சுரந்துஅந்த வேந்தனுக்கு ஆசியும் கூறி உருண்டு செல்லும் தேரின் மீது விரைந்தேறி நல்ல கருத்துகளையே எப்போதும் தரும் மற்ற முனிவர்களும் பின்வரமயக்கம் நீங்கிய நல்லுணர்வுடைய யாவருக்கும் வரந்தர வல்ல தவத்தையுடைய கலைக்கோட்டு முனிவன் சென்றான்

'அடைந்தனன், வள நகர் அலங்கரித்து எதிர்
மிடைந்திட, முனியடும் வேந்தன்; கோயில் புக்கு,
ஒடுங்கல் இல் பொன் குழாத்து உறையுள் எய்தி, ஓர்
மடங்கல்-ஆதனத்தின்மேல் முனியை வைத்தனன்.

வளம் பொருந்திய அந்நகரை மன்னன் கட்டளைப்படி அலங்கரித்து அந்த நகரத்து மக்கள் எதிர்கொண்டழைத்துச் செல்வதற்குக் கூட்டமாய் நெருங்கி வர அவ்வரசன் கலைக்கோட்டு முனிவனுடன் அந்நகருள் சென்று அரண்மனைக்குள் போய் குறைவுபடாத பொன் திணித்துப் புனைந்த ஒரு மண்டபத்தை அடைந்துஒரு சிங்காதனத்தின் மேலேஅந்த முனிவனை அமரச் செய்தான்.

'அருக்கியம் முதலிய கடன்கள் ஆற்றி, வேறு
உரைக்குவது இலது என உவந்து, தான் அருள்
முருக்கு இதழ்ச் சாந்தையாம் முக நலாள்தனை,
இருக்கொடு விதிமுறை இனிதின் ஈந்தனன்.

முனிவனை ஆசனத்தில் அமரச்செய்த பின்னர் இனி வேறு உரைப்பதற்கு எதுவுமில்லை என்னும்படி அருக்கியம் கொடுத்தல் முதலான கடமைகள் பலவும் செய்தளித்து மன்னன் தான் பெற்ற முருக்கம்பூப் போன்ற இதழ்களையுடைய சாந்தை என்னும் அழகிய பெண்ணரசியான தன் மகளை வேத நெறிப்படி இருக்கு முதலான வேத மந்திரங்களைக் கூறி இனிமையாக மணம் செய்து கொடுத்தான்.

'வறுமை நோய் தணிதர வான் வழங்கவே,
உறு துயர் தவிர்ந்தது, அவ் உலகம்; வேந்து அருள்
செறிகுழல் போற்றிட, திருந்து மா தவத்து
அறிஞன், ஆண்டு இருக்குநன்; அரச!' என்றனன்.

மழை இல்லாமையால் நீண்ட காலம் அந்த நாட்டைப் பற்றியிருந்த கொடிய வறுமை நோய் தணியும் படி பெருமழை பொழியவே அந்த நாடு மிக்க துன்பம் நீங்கப் பெற்றது. வேந்தன் பெற்ற செறிந்த கூந்தலையுடைய சாந்தை போற்றி உபசரிக்க திருத்தமான தவத்தை உடைய அறிஞனாகிய அம்முனிவன் அங்கே வாழ்கின்றான் அரசே என வசிட்டன் கூறினான்

கலைக்கோட்டு முனிவனை அழைக்கத் தயரதன் உரோமபதன் நாட்டுக்குச் செல்லுதல்

என்றலுமே, முனிவரன் தன் அடி இறைஞ்சி, 'ஈண்டு ஏகிக் கொணர்வென்' என்னா,
துன்று கழல் முடிவேந்தர் அடி போற்ற, சுமந்திரனே முதல்வர் ஆய
வன் திறல் சேர் அமைச்சர் தொழ, மா மணித் தேர் ஏறுதலும், வானோர் வாழ்த்தி,
'இன்று எமது வினை முடிந்தது' எனச் சொரிந்தார் மலர் மாரி, இடைவிடாமல்.

வசிட்டன் கூறியதும் தயரதன் வசிட்டனது திருவடிகளைத் தொழுது இப்போதே சென்று அந்த முனிவரை அழைத்து வருவேன்’’ என்று கூறிவீரக்கழலும், மணி முடியும் அணிந்த அரசர் பலரும் அடிகளில் வீழ்ந்து வணங்கிப் போற்றவும், சுமந்திரன் முதலான வலிமை மிக்க அமைச்சர்களெல்லாம் வணங்கி வாழ்த்தவும், அழகிய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் தயரதன் ஏறுதலுமே தேவர்களெல்லோரும் அரசனை வாழ்த்தி இன்றுடன் எங்கள் தீவினை யாவும் தீர்ந்து என்று மன்னனைப் போற்றி இடைவிடாமல் தொடர்ந்து பூ மழை பொழிந்தனர்

காகளமும் பல் இயமும் கனை கடலின் மேல் முழங்க, கானம் பாட,
மாகதர்கள், அரு மறை நூல் வேதியர்கள், வாழ்த்து எடுப்ப, மதுரச் செவ் வாய்த்
தோகையர் பல்லாண்டு இசைப்ப, கடல்-தானை புடை சூழ, சுடரோன் என்ன
ஏகி, அரு நெறி நீங்கி, உரோமபதன் திருநாட்டை எதிர்ந்தான் அன்றே.

எக்காளமும். வேறுபல வாத்தியங்களும் ஒலிக்கின்ற கடலை விடப் போரொலி செய்து முழங்கவும்பாடகர்கள் இன்னிசை பாடவும் அரிய மறைவல்ல அந்தணர்கள் வேத மந்திரங்களைக் கூறி வாழ்த்திசைக்கவும் இன்மொழி கூறும் வாயினரான மயில் போன்ற மங்கையர் பல்லாண்டு பாடவும்கடல் போன்ற படைகள் தன்னைச் சூழ்ந்து வரவும் சூரியனைப் போல விரைந்து சென்று அரிய நெறிகளையெல்லாம் கடந்து சென்று உரோமபத மன்னனது அழகிய நாட்டை அடைந்தான்.

உரோமபதன் தயரதனை எதிர்கொண்டழைத்து உபசரித்தல்

கொழுந்து ஓடிப் படர் கீர்த்திக் கோவேந்தன் அடைந்தமை சென்று ஒற்றர் கூற,
கழுந்து ஓடும் வரி சிலைக் கைக் கடல்-தானை புடை சூழ, கழற் கால் வேந்தன்,
செழுந் தோடும் பல் கலனும் வெயில் வீச, மாகதர்கள் திரண்டு வாழ்த்த,
எழுந்து ஓடும் உவகையுடன் ஓசனை சென்றனன் - அரசை எதிர்கோள் எண்ணி.

கொழுந்து விட்டு ஓடிப் படர்கின்ற கீர்த்தியை உடைய மன்னர் மன்னான தயரதன் தம் நகரை அடைந்த செய்தியை ஒற்றர்கள் உரோமபத மன்னனிடம் சென்று கூற, வீரக் கழலணிந்த கால்களை உடைய அவ்வரசன் தேய்ந்து மழுங்கித் திரண்ட வரியமைந்த வில்லைக் கையிலுடைய கடல் போன்ற வீரர்கள் கொண்ட படை புடை சூழ, செழுமை மிக்க காதணிகளும் பிற அணிகலன்களும் ஒளிரவும், மாகதர்கள் திரண்டு வாழ்த்தவும், மேலெழுந்து பொங்கும் மகிழ்வொடு தயரத மன்னனை எதிர்கொண்டு அழைத்து வர நினைத்து தனது நகரிலிருந்து ஒரு யோசனை துரம் சென்றான்.

எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் - தனைக் கண்ணுற்று, எழிலி நாண
அதிர்கின்ற பொலந் தேர் நின்று அரசர்பிரான் இழிந்துழி, சென்று அடியில் வீழ,
முதிர்கின்ற பெருங் காதல் தழைத்து ஓங்க, எடுத்து இறுக முயங்கலோடும்,
கதிர் கொண்ட சுடர் வேலான் தனை நோக்கி, இவை உரைத்தான் - களிப்பின் மிக்கான்:

தன்னை எதிர் கொண்டு அழைத்துச் செல்ல வருகின்ற வெற்றி பொருந்திய உரோமபத மன்னவனை பார்த்து, மேகமும் நாணும்படியாக முழங்குகின்ற தனது பொன் தேரிலிருந்து தயரதன் கீழே இறங்கும் போது உரோமபத மன்னன் சென்று தயரதன் பாதத்தில் வீழ்ந்து வணங்க, மேன்மேலும் முதிர்கின்ற பேரன்பு பெருகி ஓங்க உரோமபத மன்னனைத் தன்கைகளால் வாரி எடுத்துத் தழுவியவுடன் கதிர்விட்டு ஒளிரும் வேலையுடைய தயரதனைப் பார்த்து மகிழ்ச்சி மிகக்கொண்ட உரோமபதன் பின்வருமாறு கூறலானான்.

'யான் செய்த மா தவமோ! இவ் உலகம் செய் தவமோ! யாதோ! இங்ஙன்,
வான் செய்த சுடர் வேலோய்! அடைந்தது?' என, மனம் மகிழா மணித் தேர் ஏற்றி,
தேன் செய்த தார் மௌலித் தேர் வேந்தைச் செழு நகரில் கொணர்ந்தான் - தெவ்வர்
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவுத் தோளான்

வானுலகத்தை நிலைபெறச் செய்த ஒளி மிகுந்த வேலை உடைய அரசே! இங்குத் தாங்கள் எழுந்தருளக் காரணம் நான் செய்த பெருந்தவமோ! இந்த நாடு செய்த நல்ல தவமோ! மற்றும் வேறு ஏதேனும் நற்செயல்களோ! எனக் கூறிமனம் மகிழ்ந்து தயரதனைத் தேரில் ஏற்றி, பகைவருடலை உயிரற்ற ஊனுடலாக்கிய ஒளிமிக் கூரிய வேலை உடைய உரோமபதன் எனக் கூறப்படும் வலிய தோள்களை உடைய அவ்வரசன், தேன் பிலிற்றும் பூமாலையணிந்த மணிமுடி சூடியிருப்பவனாகிய தேர்ப்படையை உடைய தயரத வேந்தனை செழிப்புடைய தனது நகருக்கு அழைத்து வந்தான்.

ஆடகப் பொன் சுடர், இமைக்கும் அணி மாடத் திடை, ஓர் மண்டபத்தை அண்மி,
பாடகச் செம் பதும மலர்ப் பாவையர் பல்லாண்டு இசைப்ப, பைம் பொன் பீடத்து,
ஏடு துற்ற வடிவேலோன் தனை இருத்தி, கடன்முறைகள் யாவும் நேர்ந்து,
தோடு துற்ற மலர்த் தாரான் விருந்து அளிப்ப, இனிது உவந்தான், சுரர் நாடு ஈந்தான்.

பொன்னொளி விளங்கும் அழகிய மாளிகை ஒன்றிலே அமைந்த ஒரு மண்டபத்தை அடைந்து பாடகம் அணிந்த அழகிய பாதங்களை உடைய மகளிர் பலர் பல்லாண்டு பாட, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூரிய வேலை உடைய தயரதனைப் பசிய பொன்மயமான ஆசனத்திலே இருக்கச் செய்து பேரரசனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் யாவும் செய்து இதழ் நெருங்கிய மாலையணிந்த மன்னனாகிய உரோமபதன் விருந்து கொடுக்க, அமரர் நாட்டை மீட்டுக் கொடுத்தவனான தயரத மன்னன் இனிதே மகிழ்ந்தான்.

கலைக்கோட்டு முனிவனை தயரதன் விருப்பப்படி அயோத்திக்கு அழைத்துவருவதாக உரோமபதன் கூறல்

செவ்வி நறுஞ் சாந்து அளித்து, தேர் வேந்தன் தனைநோக்கி, 'இவண் நீ சேர்ந்த
கவ்வை உரைத்து அருள்தி' என, நிகழ்ந்த பரிசு அரசர்பிரான் கழறலோடும்,
'அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அருந் தவனைக் கொணர்ந்து ஆங்கண் விடுப்பென்; ஆன்ற
செவ்வி முடியோய்!' எனலும், தேர் ஏறிச் சேனையடும் அயோத்தி சேர்ந்தான்.

விருந்து முடிந்தவுடன் மணம் மிகுந்த சந்தனம் அளித்த உரோமபதன் தயரத மன்னனைப் பார்த்து தாங்கள் இங்கு வந்த காரியத்தைச் சொல்லியருள வேண்டுமென்று உரைக்க அதற்கு அரசர்க்கு அரசனாகிய தயரதன் நிகழ்ந்த செய்தியைச் சொல்ல லோடும், பொறாமை முதலிய தீய குணங்களை நீக்கிய மனத்தை உடையவரான கலைக்கோட்டு முனிவரை அயோத்திக்கு அழைத்து வந்து உன்னிடம் சேர்த்து விடுவேன் உயர்ந்த அழகிய மணிமுடி தரித்த வேந்தே! என உரோமபதன் கூறியதும் உடனே தயரதன் தேரேறி சேனையோடு அயோத்தி சென்று சேர்ந்தான்.

உரோமபதன் வேண்ட, கலைக்கோட்டு முனிவன் மனைவியுடன் அயோத்திக்குப் புறப்படுதல்


மன்னர்பிரான் அகன்றதன் பின், வய வேந்தன், அரு மறை நூல் வடிவம் கொண்டது
அன்ன முனிவரன் உறையுள்தனை அணுகி, அடி இணைத் தாமரைகள் அம் பொன்
மன்னு மணி முடி அணிந்து, வரன்முறை செய்திட, 'இவண் நீ வருதற்கு ஒத்தது
என்னை?' என, 'அடியேற்கு ஓர் வரம் அருளும்; அடிகள்!' என, 'யாவது?' என்றான்.

அரசர்க்கரசனான தசரதன் புறப்பட்டு நீங்கிய பிறகு வெற்றி பொருந்திய வேந்தனான உரோமபதன் அரிய மறைகளே வடிவெடுத்து வந்தது போன்றுள்ள
முனிவனான கலைக் கோட்டு முனியின் இருப்பிடத்தை அடைந்து அம்முனிவனது தாமரை போன்ற இரு பாதங்களையும் அழகிய தனது பொன்முடிக்கு அணியாகுமாறு வணங்கி, வேண்டிய உபசாரங்களைச் செய்து நிற்க முனிவர் அரசனைப் பார்த்து நீ இங்கு வந்த காரியம் என்ன என்று கேட்க அதற்கு மன்னன்அடிகளே! அடியேனுக்கு ஒரு வரம் தரவேண்டும் என்று சொல்ல அது என்ன என்றான்.

'புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க பெருந்தகைதன் புகழில் பூத்த
அறன் ஒன்றும் திரு மனத்தான், அமரர்களுக்கு இடர் இழைக்கும் அவுணர் ஆயோர்
திறல் உண்ட வடி வேலான், "தசரதன்" என்று, உயர் கீர்த்திச் செங்கோல் வேந்தன்,
விறல் கொண்ட மணி மாட அயோத்திநகர் அடைந்து, இவண் நீ மீள்தல்!' என்றான்.

ஒரு புறாவைக் காப்பாற்றுவதற்காகத் தன்னையே தரத்துணிந்து தராசுத்தட்டிலேறிய பெருந்தகையான சிபிக் சக்கரவர்த்தியினது புகழ் பொருந்திய பெருங்குடியில் தோன்றிய அறப்பண்பு பொருந்திய நல்ல மனத்தினனும், தேவர்களுக்குத் துன்பம் தந்த அசுரரின் வலிமையை அழித்த வேலை உடையவனும், தயரதன் என்னும் பெயர்கொண்ட புகழ்மிக்க செங்கோலுடையவனுமான வேந்தனது வலிமையை அணியாகக் கொண்ட மணிகளால் இழைத்த மாளிகைகளையுடைய அயோத்தி நகரத்தை அடைந்து பின் இங்கு மீண்டு திரும்புதலே நான் வேண்டும் வரமாகும் என்று உரோமபதன்
சொன்னான்.

'அவ் வரம் தந்தனம்; இனித் தேர் கொணர்தி' என, அருந் தவத்தோன் அறைதலோடும்,
வௌ; அரம் தின்று அயில் படைக்கும் சுடர் வேலோன், அடி இறைஞ்சி, 'வேந்தர்வேந்தன்
கவ்வை ஒழிந்து உயர்ந்தனன்' என்று, அதிர் குரல் தேர் கொணர்ந்து, 'இதனில், கலை வலாள!
செவ்வி நுதல் திருவினொடும் போந்து ஏறுக!' என, ஏறிச் சிறந்தான் மன்னோ.

நீ கேட்ட அந்த வரத்தைக் கொடுத்தோம். இனி தேர் கொண்டு வருக! என்று அந்தத் தவ முனிவன் கூறிய உடனே வெவ்விய அரத்தால் அராவப்பட்டு கூரிய ஒளியுடைய வேலை உடைய, உரோமபதன் கலைக்கோட்டு முனிவனது பாதங்களைத் தொழுது மன்னர் மன்னனான தயரதன் துன்பம் நீங்கி உயர்வான் என்றெண்ணி, அதிர்ந்து ஒலிக்கும் தேரை வரவழைத்து கலைகளில் வல்லோனே! இதோ இத்தேரில் அழகிய நெற்றியை உடைய திருமகளைப் போன்ற சாந்தையுடன் ஏறி அருள்க! என்று கூறஅவ்வாறே அம்முனிவன் ஏறி அமர்ந்தான்.

முனிவன் போவதைக் கண்டு, தேவர்கள் மகிழ்தல்

குனி சிலை வயவனும் கரங்கள் கூப்பிட,
துனி அறு முனிவரர் தொடர்ந்து சூழ்வர,
வனிதையும், அரு மறை வடிவு போன்று ஒளிர்
முனிவனும், பொறிமிசை நெறியை முன்னினார்.

வளைந்த வில்லையுடைய வெற்றி மிகுந்த வேந்தனான உரோபத மன்னனும் கைகளைக் குவித்து வணங்கி நிற்கவும், குற்றம் நீங்கிய மனத்தினரான முனிவர்கள் பலரும் தொடர்ந்து பின்பற்றிவரவும், தனது வாழ்க்கைத் துணைவியான சாந்தையுடன், அரிய வேதங்களே உருவெடுத்து வந்தது போன்ற அந்த முனிவனும் இயந்திரத் தேர் மீது அமர்ந்து அயோத்தியின் வழியே செல்ல எண்ணினார்.

அந்தர துந்துமி முழக்கி, ஆய் மலர்
சிந்தினர், களித்தனர் - அறமும் தேவரும் -
'வெந்து எழு கொடு வினை வீட்டும் மெய்ம்முதல்
வந்து எழ அருள் தருவான்' என்று எண்ணியே.

அறக்கடவுளும் தேவர்களும் வெந்து எழுந்து நம்மை வருத்தும் கொடிய துன்பங்களை அழிக்கும் மெய் முதற் பொருளாகிய பரமன் இங்கு வந்து தோன்ற, இம் முனிவன் அருள் புரிவான் என நினைத்து தேவ வாத்தியங்களை முழக்கிக் கொண்டு ஆய்ந்தெடுத்த நறுமண மலர்களைத் தூவி மகிழ்ச்சி மிகக் கொண்டனர்.