பால காண்டத்தில் ஐந்தாவது படலம் திரு அவதாரப் படலமாகும்.திருமாலின் அவதாரமான ராமபிரான் அவதாரம் செய்ததை கூறும் பகுதியாகும். இதில் தயரத மன்னன் மகப்பேறின்றி இருத்தலை வசிட்ட முனிவரிடம் கூறுதலும், வசிட்டர் தேவர்களுக்கு திருமால் அருளியதை சிந்தித்தலும், புதல்வரை அளிக்கும் வேள்வி செய்யத் தயரதனுக்கு வசிட்டர் கூறுதலும், வேள்வித் தீயில் எழுந்த பூதம் பிண்டம் கொண்டுதருதலும், அப்பிண்டத்தை தயரதன் தேவியர் மூவருக்கும் பகிர்ந்தளித்தலும், அதன் காரணமாக தேவியர் கருவுருதலும், ராமன் முதலிய நால்வரும் அவதரித்தலும், புதல்வர்களுக்கு வசிட்டர் பெயர் சூட்டுதலும், பிள்ளைகளின் வளர்ச்சியும்-கல்வி பயிற்சியும்-யாவரும் போற்ற ராமன் இனிதிருத்தலும் விவரிக்கப்படுகின்றன. இதில் நூற்று முப்பத்து இரண்டு பாடல்கள் உள்ளன. எனவே நான்கு பகுதியாகப் பிரித்து நான்கு பதிவுகளாக பிரித்து இடுகையிடுகின்றேன்.

மகப் பேறு இல்லாமை குறித்து தயரதன் வசிட்டனிடம் வருந்துதல்

ஆயவன், ஒரு பகல், அயனையே நிகர்
தூய மா முனிவனைத் தொழுது, 'தொல் குலத்
தாயரும், தந்தையும், தவமும், அன்பினால்
மேய வான் கடவுளும், பிறவும், வேறும், நீ;

அரசியல் படலத்தில் கூறிய அப்பெருமையெல்லாம் பொருந்தியவனான அந்தத் தயரத மன்னன் ஒரு நாள் பிரமனுக்கு ஒப்பாகத் திகழும் தூய்மை பொருந்திய மாமுனிவனாகிய வசிட்ட முனிவனை வணங்கி பழமை பொருந்திய எமது குலத்தாய்மாரும் தந்தைமாரும்தவப்பயன்களும் அன்பு கொண்டு நான் விரும்பும் கடவுளும் மற்றையோரும், வேறுபட்ட உயிர்களும் அனைத்தும் எனக்குத் தாங்களே தாம்.

'எம் குலத் தலைவர்கள், இரவிதன்னினும்
தம் குலம் விளங்குறத் தரணி தாங்கினார்,
மங்குநர் இல் என, வரம்பு இல் வையகம்,
இங்கு, நின் அருளினால், இனிதின் ஓம்பினேன்.

எமது சூரிய குலத்தலைவர்கள் எல்லோரும் தமது குல முதல்வனான சூரியனை விடவும் தங்கள் குலம் விளக்க முறும்படியாக இவ்வுலகை ஆதரித்துக் காத்தனர் புகழில் மயங்கியவர்கள் இல்லை என்னுமாறு எல்லைகாண இயலாத இவ்வுலகத்தை இங்கு, இவ்வயோத்தியிலிருந்தே உனது அருளின் உதவியால் இனிமையுறக் காத்து வந்தேன்.

அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற,
உறு பகை ஒடுக்கி, இவ் உலகை ஓம்பினேன்;-
பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம்
மறுகுவது என்பது ஓர் மறுக்கம் உண்டுஅரோ.

நான் ஆட்சி செய்த அறுபதினாயிரம் ஆண்டுகளும் கழிந்து போகும்படி உற்ற பகைவர்களை ஒடுங்குமாறு செய்து இவ்வுலகத்தைக் காத்து வந்தேன். எனக்கு வேறு ஒரு குறைவும் இல்லை. எனது ஆட்சிக்குப் பிறகு இந்த உலகம் நல்லாட்சியின்றி குழப்பமடைய நேரிடும் என்று ஒரு மனக்கலக்கம் எனக்கு இருக்கிறது.

'அருந் தவ முனிவரும், அந்தணாளரும்,
வருந்துதல் இன்றியே வாழ்வின் வைகினார்;
இருந் துயர் உழக்குநர் என் பின் என்பது ஓர்
அருந் துயர் வருத்தும், என் அகத்தை' என்றனன்.

அரிய தவத்தை உடைய முனிவர்களும் அறவோர்களாகிய அந்தணர்களும் யாதும் வருத்தமுறுதல் இல்லாமலே துன்பமற்று நல்வாழ்விலே இருந்தார்கள். மக்கள் பேறில்லாத எனது ஆட்சிக்குப் பிறகு அப்பெரியவர்கள் மிகவும் துன்பத்தாலே வருந்துவார்களே என்பதொரு அரிய துயரமானது எனது மனத்தை வருத்திக் கொண்டிருக்கிறது என்றான்.


முன்னம் அமரர்க்குத் திருமால் அருளியதை வசிட்டன் சிந்தித்தல்

முரசு அறை செழுங் கடை, முத்த மா முடி,
அரசர் தம் கோமகன் அனைய கூறலும்,
விரை செறி கமல மென் பொருட்டில் மேவிய
வர சரோருகன் மகன் மனத்தில் எண்ணினான்-

முரசு முழங்கும் கடை வாயிலை உடையவனும் முத்து முதலிய மணிகளால் அமைந்த மணிமுடி தரித்திருப்பவனுமான, மன்னர் மன்னனாகிய தயரதன் அத்தகைய சொற்களைச் சொல்லும், அது கேட்ட மணம் செறிந்த தாமரை மலரின் அகவிதழ் உச்சியில் அமர்ந்திருப்பவராகிய மேலான நான் முகனது மகனாகிய வசிட்டன் பின்வருவனவற்றை தனது மனத்திலே நினைப்பானாயினான்.

அலை கடல் நடுவண், ஓர் அனந்தன் மீமிசை,
மலை என விழி துயில்வளரும் மா முகில்,
'கொலைதொழில் அரக்கர்தம் கொடுமை தீர்ப்பென்' என்று,
உலைவுறும் அமரருக்கு உரைத்த வாய்மையே.

அலைகள் மிகுந்துள்ள பாற்கடல் நடுவே ஒப்பற்ற ‘அனந்தன்’ எனும் பாம்பணை மேலே கரியமலை போல கண்வளர்கின்ற பெரிய மேகம் போன்ற (நிறமும், செயலுமுடைய) திருமால் உயிர்களைக் கொல்லுதலே தொழிலாக உடைய அரக்கரின் கொடுமையைத் தீர்ப்பேன் என்று அவ்வரக்கர்களால் வருந்தும் தேவர்களுக்கு சொன்ன வாக்குறுதியை.

முந்திய பாடலில் ‘எண்ணினான்’ என்பதனுடன் “வாய்மையை” என்பது முடிகிறது. அலைகடல் என்று பொதுவாகக் கூறினாலும். திருமாலின் உறைவிடமான ‘பாற்கடல்’ என்று பொருள் உரைக்கப்பட்டது. மீமிசை: உருபின் மேல் உருபு வந்து ‘மிக மேலே’ என்ற பொருள் தந்து நின்றது. ‘மலை’ என்ற பொதுச்சொல்லும் திருமாலைக் குறிப்பதாதலின் ‘கரியமலை’ என்ற பொருளை உடையதாயிற்று. தேவர்களுக்கு அரக்கரால் மரணமில்லை என்பதை உணர்த்த ‘அமரர்’ என்றார். அமரர்: மரணமற்றவர். வல்மை: வாக்குறுதி. அடுத்து வரும் 23 பாடல்கள் தேவர்களுக்குத் திருமால் வாக்குறுதி அளித்த செயலை விரித்துரைப்பனவாகும்.


பாக சாதனந்தனைப் பாசத்து ஆர்த்து, அடல்
மேகநாதன், புகுந்து இலங்கை மேய நாள்,-
போக மா மலர் உறை புனிதன்,- மீட்டமை,
தோகை பாகற்கு உறச் சொல்லினான் அரோ.

சுடுகின்ற தொழிலை உடைய அரக்கர்களால் வானுலகில் வாழும் தேவர்கள் வாழ்வறிந்து நஞ்சுதங்கிய மிடற்றை உடைய சிவபெருமானது பாதங்களை அடைந்து தம
சுடுகின்றது துன்பத்தைக் கூறலும் மேலே நிகழ வேண்டியவைகளை முன்னரே உணர்ந்துள்ள அப்பெருங்கடவுளான சிவபெருமான், இனி யான் அரக்கருடன் போர்புரிய மாட்டேன் என மறுத்து உரைத்து அவ்வமரர்களுடன் நான்முகனது இருப்பிடம் நோக்கிச் சென்றான்.

இருபது கரம், தலை ஈர்-ஐந்து, என்னும் அத்
திருஇலி வலிக்கு, ஒரு செயல் இன்று, எங்களால்;
கரு முகில் என வளர் கருணை அம் கடல்
பொருது, இடர் தணிக்கின் உண்டு' எனும் புணர்ப்பினால்.

இருபது கைகளும். பத்துத்தலைகளும் உடையவன் என்று சொல்லப்படும் அந்த அருட் செல்வமில்லாத இராவணனது உரவலிமை, வரவலிமை ஆகிய வல்லமைக்கு எங்களால் ஒரு எதிர்ச் செயலும் செய்ய இயலாதவர்களாக இருக்கிறோம். கரிய மேகம் போல பாற்கடலில் கண்வளர்கின்ற கருணைக் கடலாகிய திருமால் பொருது அவ்வரக்கருடன் போரிட்டு, எங்கள் துன்பத்தைத் தணித்தால்தான் எங்களுக்கு உய்வுண்டு என்னும் கருத்தினால்.

திரை கெழு பயோததித் துயிலும், தெய்வ வான்
மரகத மலையினை வழுத்தி நெஞ்சினால்,
கர கமலம் குவித்து இருந்த காலையில்,-
பரகதி உணர்ந்தவர்க்கு உதவு பண்ணவன்,

அலைகள் கெழுமிய பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் தெய்வத்தன்மை பொருந்திய உயர்ந்த மரகதமலை போன்ற திருமாலை மனத்தால் வணங்கித் துதித்து தாமரை போன்ற கைகளைக் கூப்பி தியானித்து இருந்த போது மேலான கதியிது என உணர்ந்து துதிப்பவர்களுக்கு காலம் தாழ்த்தாது உதவும் திருமால்

‘வந்து தோன்றினான்’ என்ற அடுத்த பாடல் தொடருடன் பொருள்முடிவு பெறும்.

கரு முகில் தாமரைக் காடு பூத்து, நீடு
இரு சுடர் இரு புறத்து ஏந்தி, ஏந்து அலர்த்
திருவொடும் பொலிய, ஓர் செம்பொன் குன்றின்மேல்
வருவபோல், கலுழன்மேல் வந்து தோன்றினான்.

ஒரு கருமை நிறமான மேகம் தாமரை மலர்த் தொகுதியை மலர்த்திக் கொண்டும், நீண்ட இரு சுடர்களை இருபுறத்தும் ஏந்திக்கொண்டும், செம்பொன்னால் ஆகியதொரு மலை மேல் ஏறிவருவதைப் போல மலர்ந்த தாமரையில் அமர்ந்திருக்கும் இலக்குமியோடும் அம்மேரு மண்டபம் பொலிய கருடன் மீது வந்து காட்சி தந்தான்.

எழுந்தனர், கறைமிடற்று இறையும்; தாமரைச்
செழுந் தவிசு உவந்த அத் தேவும் சென்று, எதிர்
விழுந்தனர் அடிமிசை விண்ணுளோரொடும்;
தொழும்தொறும், தொழும் தொறும், களி துளங்குவார்.

நீலகண்டனாகிய இறைவனும், தாமரையாகிய செழித்த ஆசனத்தினை விரும்பி அமர்ந்திருக்கும் நான்முகனும் திருமாலின் திருவடிகளை வணங்கி தேவர்களொடும் எழுந்தவர்களாகி, அங்குத் தோன்றிய திருமாலுக்கு எதிரே சென்று, அவரை துதித்துத் தொழும் போதெல்லாம்மகிழ்ச்சியால் ஆடுவாராகி நின்றனர்.

ஆடினர்; பாடினர்; அங்கும் இங்குமாய்
ஓடினர்; உவகை மா நறவு உண்டு ஓர்கிலார்;
'வீடினர் அரக்கர்' என்று உவக்கும் விம்மலால்,
சூடினர், முறை முறை துளவத் தாள்-மலர்.

அசுரர்கள் இறந்து பட்டார்கள் என மனம் மகிழும் பொருமலால் அத்தேவர்கள் மகிழ்ச்சி என்னும் தேனைப் பருகி, எதுவும் அறியாதவர்களாய் ஆடியும். பாடியும் அங்கும் இங்குமாய் ஓடினவர்களாக அப்பரமனது துழாய் மணக்கும் பாத மலர்களை வரிசை வரிசையாகச் சென்றுவணங்கித் தலையில் சூடிக்கொண்டார்கள்.

பொன்வரை இழிவது ஓர் புயலின் பொற்பு உற,
என்னை ஆள் உடையவன் தோள்நின்று எம்பிரான்,
சென்னி வான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து, அரி
துன்னு பொற் பீடமேல் பொலிந்து தோன்றினான்.

பொன்மலையாகிய மேருவிலிருந்து கீழே இறங்குகின்ற ஒரு மேகத்தின்அழகுதோன்ற என்னைஆளாக ஆட்கொண்டிருக்கும் கலுழனுடைய தோள்களில் இருந்து ஆகாயமளாவிய சிகரத்தை உடைய அம் மண்டபத்தை அடைந்து சிங்க வடிவுடைய பொன்ஆசனத்தின் மேல் எம்பெருமானாகிய திருமால் பொலிவுறத் தோன்றலானான்.
விதியடு முனிவரும், விண்ணுளோர்களும்,-
மதி வளர் சடைமுடி மழுவலாளனும்
அதிசயமுடன் உவந்து, அயல் இருந்துழி-
கொதி கொள் வேல் அரக்கர் தம் கொடுமை கூறுவார்:

நான்முகனும், முனிவர்களும் விண்ணுலகில் வாழும் தேவர்களும் பிறைச் சந்திரன் வாழும் சடை முடியுடைய, மழுவாளியான சிவபிரானும் மிகுந்த வியப்புடன், மகிழ்ந்து திருமாலுக்கு அருகிலமைந்த ஆசனங்களில் இருந்த போது கொதிக்கும் வேலை உடைய அரக்கர்களது கொடுந்தொழிலைச் சொன்னார்கள்.

ஐ-இரு தலையினோன் அனுசர் ஆதியோன்
மெய் வலி அரக்கரால், விண்ணும் மண்ணுமே
செய் தவம் இழந்தன் -திருவின் நாயக!-
உய் திறம் இல்லை' என்று உயிர்ப்பு வீங்கினார்.

இலக்குமிக்கு நாயகனாகிய பெருமானே! பத்துத் தலைகளை உடைய இராவணன் அவனுக்குப் பின் பிறந்தவர்கள் முதலான உடல் வலிமை மிக்க அரக்கர்களால் விண்ணுலகமும், மண்ணுலகமும் தாம் செய்துள்ள புண்ணியங்களை இழந்து வருந்துகின்றன. அவை உய்வதற்கு வழியே இல்லை என்று கூறி, பெரு மூச்சு விட்டனர்.

'எங்கள் நீள் வரங்களால், அரக்கர் என்று உளார்,
பொங்கு மூஉலகையும் புடைத்து அழித்தனர்;
செங் கண் நாயக! இது தீர்த்தி; இல்லையேல்,
நுங்குவர் உலகை, ஓர் நொடியில்' என்றனர்.

எங்களுடைய மிகுந்த வரபலத்தால் அரக்கர் என்னும் ‘கொடியவர்கள் வளர்ந்தோங்கிய மூவுலகத்துயிர்களையும் பொருது கொன்றனர். அழகிய கண்களையுடைய தலைவனே இனி, இவ்வரக்கர்களின் கொடிய செயலைத் தீர்க்கவில்லையானால் வெகுவிரைவில் உலகம் முழுவதையும் அழித்துவிடுவர் என்றார்கள்.

என்றனர், இடர் உழந்து, இறைஞ்சி ஏத்தலும்,
மன்றல் அம் துளவினான், 'வருந்தல்; வஞ்சகர்-
தம் தலை அறுத்து, இடர் தணிப்பென் தாரணிக்கு;
ஒன்று நீர் கேண்ம்' என, உரைத்தல் மேயினான்:

என்று கூறியவர்களான தேவர்கள் துன்பத்தால் வருந்தி திருமாலைத் துதித்து வணங்கிடவும் மணமும், அழகும் உடைய துழாய் மாலையணிந்த திருமால் அத்தேவர்களை நோக்கி வருந்தாதீர்கள்! வஞ்சக அரக்கர்களின் தலைகளைத் துணித்து உலகத்தின் துன்பத்தைத் தணிப்பேன் அதற்குரிய தொன்றைக் கேளுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தான்.

'வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய்,
கானினும், வரையினும், கடி தடத்தினும்,
சேனையோடு அவதரித்திடுமின் சென்று' என,
ஆனனம் மலர்ந்தனன் -அருளின் ஆழியான்:

விண்ணுலகில் வாழும் தேவர்கள் ஆகிய நீங்கள் எல்லோரும் குரங்கினங்களாக காடுகளிலும், மலைகளிலும், அம்மலைத் தாழ் வரைகளிலும் சென்று பிறப்பீராக என்று கருணைக் கடலான திருமகள் நாயகன் திருவாய் மலர்ந்தருளினான்.

'மசரதம் அனையவர் வரமும், வாழ்வும், ஓர்
நிசரத கணைகளால் நீறுசெய்ய, யாம்,
கச ரத துரக மாக் கடல்கொள் காவலன்,
தசரதன், மதலையாய் வருதும் தாரணி.

கானல் நீரைப் போன்றவர்களாகிய அரக்கர்களுடைய வரபலத்தையும், வாழ்வையும் எமது குறி தவறாத அம்புகளால் சாம்பலாக்க (அழிக்க) யாமே, யானை, தேர், காலாள் என்னும் கடல் போன்ற நாற்பெருஞ்சேனைகளை உடைய வேந்தனான தயரதன் புத்திரனாக உலகத்தில் வந்து அவதரிக்கின்றோம்.

'வளையடு திகிரியும், வடவை தீதர
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்,
இளையர்கள் என அடி பரவ ஏகி, நாம்,
வளைமதில் அயோத்தியில் வருதும்' என்றனன்.

எமது படைக்கலங்களான சங்கும், சக்கரமும், வடவா முகாக்கினியும் தீய்ந்து போகச் செய்யும் நஞ்சினை உடைய எமது படுக்கையான அனந்தனும் தம்பியராகப் பிறந்து எம்மை அடிவணங்க பூமியில் சென்று சுற்றும் வளைந்த மதிலை உடைய அயோத்தி மாநகரில் அவதரிப்போம் என்றான்.

என்று அவன் உரைத்தபோது, எழுந்து துள்ளினார்;
நன்றிகொள் மங்கல நாதம் பாடினார்;-
'மன்றல் அம் செழுந் துளவு அணியும் மாயனார்,
இன்று எமை அளித்தனர்' என்னும் ஏம்பலால்.

அத்திருமால் கூறியருளிய போது கேட்ட அத்தேவர்கள் அனைவரும் மணம் பொருந்திய, அழகிய துழாய்மாலை அணியும் மாயனாகிய திருமால் இன்று எங்களை எல்லாம் காப்பாற்றி அருளினார் என்னும் மகிழ்ச்சியால் எழுந்து நின்று ஆடினார்கள், நன்மையான மங்கல கீதம் பாடினார்கள்.

'போயது எம் பொருமல்' என்னா, இந்திரன் உவகை பூத்தான்;
தூய மா மலர் உளோனும், சுடர்மதி சூடினோனும்,
சேய் உயர் விசும்பு உளோரும், 'தீர்ந்தது எம் சிறுமை' என்றார்;
மா இரு ஞாலம் உண்டோன், கலுழன்மேல் சரணம் வைத்தான்.

எங்கள் துயரம் தீர்ந்தது என்று கூறி இந்திரன் மகிழ்ச்சி அடைந்தான். தூய அழகிய தாமரையில் வாழும் பிரமனும், ஒளியுடைய சந்திரனைத் தலையில் அணிந்துள்ள சிவபெருமானும், மிக உயர்வான விண்ணுலகிலே வாழ்பவர்களும் எமது தாழ்வு தீர்ந்தது என்றார்கள். அகன்ற பெரிய இவ்வுலகை உண்டருளிய திருமால் தான் ஏறிவந்த கருடன் மீது திருவடிகளை வைத்தான்.

என்னை ஆளுடைய ஐயன், கலுழன் மீது எழுந்து போய
பின்னர், வானவரை நோக்கி, பிதாமகன் பேசுகின்றான்:
"முன்னரே எண்கின்வேந்தன் யான்"-என, முடுகினேன்; மற்று,
அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடுமின்' என்றான்.

என்னை ஆட்கொண்ட தலைவனாகிய திருமால் கருடன் மீது எழுந்தருளிச் சென்றதன் பின்பு நான்முகன், தேவர்களைப் பார்த்துப் பேசலானான். முன்பே, கரடிகட்கு அரசனான ‘சாம்பவந்தன்’ என்பவனாக நான் வந்து பிறந்துள்ளேன். மற்றும் அப்படியே நீங்கள் எல்லோரும் சென்று அவதரித்திடுவீராக என்று கூறினான்.

தருவுடைக் கடவுள் வேந்தன் சாற்றுவான், 'எனது கூறு
மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும்' என்ன்
இரவி, 'மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன்' என்று ஓத்
அரியும், 'மற்று எனது கூறு நீலன்' என்று அறைந்திட்டானால்.

கற்பகம் முதலிய ஐந்து மரங்களையுமுடைய தேவர்களுக்கு அரசனான இந்திரன் சொல்லலுற்றான்.எனது அம்சமானது. பகைவர்களுக்கு இடி போன்ற வாலியும், அவன் மகன் அங்கதனும் ஆகும் என்றுரைக்க, சூரியன் பின்னை. எனது அம்சம் அங்கேயே அந்த வாலிக்குத் தம்பியான சுக்கிரீவன் என்று சொல்ல நெருப்புக் கடவுள் பின்னை. எனது அம்சம் ‘நீலன்’ என்னும் வானர வீரனாகும் எனக் கூறினான்.

வாயு, 'மற்று எனது கூறு மாருதி' எனலும், மற்றோர்,
'காயும் மற்கடங்கள் ஆகி, காசினி அதனின்மீது
போயிடத் துணிந்தோம்' என்றார்; புராரி, 'மற்று யானும் காற்றின்
சேய்' எனப் புகன்றான்; மற்றைத் திசையுளோர்க்கு அவதி உண்டோ.

காற்றுத் தேவனான வாயு எனது அம்சம் மாருதி என்று சொல்லலும், மற்ற தேவர்கள் எல்லோரும் பகைவரைச் சினக்கும் வானரங்கள் ஆகி, பூமியிலே சென்று பிறக்க முடிவு செய்துவிட்டோம் என்றார்கள். திரிபுரத்தை எரித்த சிவபிரான் யானும் வாயுகுமாரனான அனுமனாகப் பிறக்கிறேன் என்று கூறலானான். எனவே, மற்றுமுள்ள எல்லாத் திசைகளிலும் வாழ்பவர்க்கும் எந்தத் துன்பமும் உண்டோ (இல்லை என்பதாம்).

அருள் தரும் கமலக் கண்ணன் அருள்முறை, அலர் உளோனும்,
இருள் தரும் மிடற்றினோனும், அமரரும், இனையர் ஆகி
மருள் தரும் வனத்தில், மண்ணில், வானரர் ஆகி வந்தார்;
பொருள் தரும் இருவர் தம் தம் உறைவிடம் சென்று புக்கார்.

கருணைமிக்க தாமரைக் கண்ணனாகிய திருமால் அருள் செய்த முறைப்படியே தாமரை மலரில் உறையும் பிரமனும் இருண்டமிடற்றை உடைய சிவபிரானும், மற்றத் தேவர்களும் மேலே கூறிய முறைப்படி வடிவெடுத்தவராகி இருண்ட காடுகளிலும் நிலத்திலும் குரங்குகளாக உருமாறி வந்துள்ளார்கள். எல்லோரும் பொருட்டாகக் கருதிப் போற்றும் பிரமன், சிவன் ஆகிய இருவரும் தங்கள் உறைவிடங்களுக்குச் சென்று சேர்ந்தார்கள்.

புதல்வரை அளிக்கும் வேள்வி செய்ய வசிட்டன் கூறுதல்

ஈது
, முன் நிகழ்ந்த வண்ணம் என, முனி, இதயத்து எண்ணி,
'மாதிரம் பொருத திண் தோள் மன்ன! நீ வருந்தல்; ஏழ்-ஏழ்
பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி,
தீது அற முயலின், ஐய! சிந்தைநோய் தீரும்' என்றான்.

ஆறாவது பாட்டுத் தொடங்கி. இருபத்து எட்டாம் பாட்டுவரைகூறப்பட்ட நிகழ்ச்சி யாவும். திருமால் முன்பு தேவர்களுக்கு அருள் செய்ததனை வசிட்டன் தனது மனத்தில் சிந்தித்தனவாகும்.

இது முன்பு நிகழ்ந்த செய்தியாகும் என்று, வசிட்டன் மனத்தில் நினைத்து மன்னனைப் பார்த்து திசை எங்கும் சென்று போர் செய்து வென்ற வலிய தோள்களை உடைய மன்னனே! நீ (புத்திரப் பேற்றை எண்ணி) வருந்தாதே. ஈரேழாக எண்ணப்படும் உலகம் யாவையும் காக்கும் புத்திரர்களைத் தரவல்ல வேள்வியை குற்றமின்றி நீ முயன்று செய்தால் ஐய! நின்மனத் துயர் நீங்கும் என வசிட்டன் கூறினான்.

வேள்வி செய்ய வேண்டுவது யாது என தயரதன் வினவுதல்

என்ன மா முனிவன் கூற, எழுந்த பேர் உவகை பொங்க,
மன்னவர்மன்னன், அந்த மா முனி சரணம் சூடி,
'உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து அடைவது உண்டோ?
அன்னதற்கு, அடியேன் செய்யும் பணி இனிது அளித்தி' என்றான்.

மாமுனிவனாகிய வசிட்டன் கூற அது கேட்ட மன்னர் மன்னனாகிய தயரதன் மிகுந்த மகிழ்ச்சி பொங்க எழுந்து மாபெரும் முனிவனாகிய வசிட்டனது பாதங்களை வணங்கி, தலைக்கு அணியாக அணிந்து தங்களையே அடைக்கலம் அடைந்திருக்கும் அடியவனாகிய எனக்கு துன்பம் வந்து சேர்தல் உண்டோ? அந்த வேள்வியைச் செய்வதற்கு அடியவனாகிய நான் செய்ய உரிய பணி விடையை இனிதே எனக்குத் தருக என்று கூறினான்.

கலைக்கோட்டு முனிவனைக் கொண்டு வேள்வி செய்யுமாறு வசிட்டன் உரைத்தல்

'மாசு அறு சுரர்களோடு மற்றுளோர் தமையும் ஈன்ற
காசிபன் அருளும் மைந்தன், விபாண்டகன், கங்கை சூடும்
ஈசனும் புகழ்தற்கு ஒத்தோன், இருங் கலை பிறவும் எண்ணின்
தேசுடைத் தந்தை ஒப்பான், திருவருள் புனைந்த மைந்தன்,

குற்றமற்ற தேவர்களுடனே மற்று முள்ள அசுரர் முதலானோரையும் பெற்ற தந்தையான காசிபர் பெற்றகுமாரனும், கங்கையாற்றைச் சடையில் தாங்கிய சிவபெருமானும் புகழ்ந்து கூறுவதற்கு ஒத்த பெருமையுடயவனும், மேலான கலையறிவு போன்றவைகளை எண்ணினால் சிறந்த தனது தந்தையான காசிபனை ஒத்தவனும் ஆகிய விபாண்டகன் என்னும் முனிவனது திருவருளைப் பெற்றுத் திகழும் புத்திரன்.

'வரு கலை பிறவும், நீதி மனுநெறி வரம்பும், வாய்மை
தரு கலை மறையும், எண்ணின், சதுமுகற்கு உவமை சான்றோன்,
திருகலை உடைய இந்தச் செகத்து உளோர் தன்மை தேரா
ஒரு கலை முகச் சிருங்க உயர் தவன் வருதல் வேண்டும்.

வளர்ந்த கல்வியாலும், கேள்வி முதலிய பிறவற்றாலும் நீதியைக் கூறும் மனு நூல் வரம்பாலும், உண்மையை உணர்த்தும் வேதங்களை ஓதி யுணர்ந்ததாலும் நினைத்துப் பார்த்தால் நான்முகனுக்கு ஒப்பாகிய பெருமை உடையவனும், பலவித மாறுபட்ட இயற்கையை உடைய உலகத்தவரின் தன்மையை அறியாதவனும், கலைமான் கொம்பு போன்ற கொம்பை முகத்தில் உடையவனுமான சிருங்கன் என்னும் பெயருடைய உயர்ந்த தவத்தை உடைய முனிவன் வரவேண்டும்.

'பாந்தளின் மகுட கோடி பரித்த பார் அதனில் வைகும்
மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன், மா தவத்தன், எண்ணின்
பூந் தவிசு உகந்து உளோனும், புராரியும், புகழ்தற்கு ஒத்த
சாந்தனால் வேள்வி முற்றின், தணையர்கள் உளர் ஆம்' என்றான்.

பாம்பினது பல தலைகளாலும் தாங்கப் பெற்ற இவ்வுலகில் வாழும் மனிதரை மிருகங்கள் என நினைக்கும் மனத்தை உடையவனும், சிறந்த பெருந்தவம் உடையவனும், எண்ணிப் பார்த்தால் தாமரை ஆசனத்தை விரும்பி அதில் அமர்ந்துள்ள பிரமனும், திரிபுரத்தை அழித்த சிவனும் புகழத் தக்க பொறையாளனுமான அக்கலைக்கோட்டு முனிவனாலே மகப் பேறளிக்கும் வேள்வியை நிறைவேற்றினால் புத்திரர்கள் உண்டாவார்கள் என்றான்.

கலைக்கோட்டு முனிவனை அழைத்து வரும் வழி பற்றி தயரதன் கேட்டல்

ஆங்கு, உரை இனைய கூறும் அருந் தவர்க்கு அரசன், செய்ய
பூங் கழல் தொழுது, வாழ்த்தி, பூதல மன்னர் மன்னன்,
'தீங்கு அறு குணத்தால் மிக்க செழுந் தவன் யாண்டை உள்ளான்?
ஈங்கு யான் கொணரும் தன்மை அருளுதி, இறைவ!' என்றான்.

இத்தகைய நல்லுரை கூறியஅரிய தவத்தினர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் வசிட்ட முனிவனது அழகிய பாத மலர்களை வணங்கிப் போற்றி உலகத்து அரசர்க்கெல்லாம் அரசனான தயரதன், குற்றமற்ற நற்குணங்களால் உயர்ந்த செழுமைமிக்க அந்தத் தவமுனிவன் எங்கிருக்கிறான்? இங்கு நான் அம்முனிவனை அழைத்துக் கொண்டு வரும் விதத்தை எனக்குத் தெய்வம் போன்றவனே! அருளிச் செய்வாயாக என்றான்.