நாட்டுப் படலம் அயோத்தி நகரின் சிறப்பினை கூறும் படலமாகும். இதில் நகரின் அமைப்பு, மதிலின் மாட்சி, அகழியின் பாங்கு சோலையின் தன்மை, எழு நிலை மாடங்கள், மாளிகைகள் ஆகியவற்றின் தோற்றமும், பொலிவும் ஆகியவற்றை இப்படலம் விளக்குகின்றது. நாடு, நகரம், காடு, மேடு, எதுவானாலும் அங்கு வாழும் மக்களின் செயலையும் சீர்மையையும் பொறுத்தே சிறப்பாக அமையும். அதனால் அயோத்தி நகரத்தின் மக்களை பற்றி கம்பர் வர்ணிக்கின்றார். நகரத்தாரின் ஆடல், பாடல், மகளிர் மேனியழகு, மாந்தரின் மகிழ்ச்சி ஆகியவற்றை அறிவதோடு அங்கு வழ்வோரின் பொழுது போக்கு நிகழ்ச்சிகளையும் அறிகின்றோம். நகரப் படலத்தில் எழுபத்து நான்கு பாடல்கள் உள்ளன. அதனை இரண்டு பகுதியாக பதிவு செய்கின்றேன்.

அயோத்தி மாநகரின் அழகும் சிறப்பும்

செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின் சீரிய கூரிய தீம் சொல்
வல்லிய கவிஞர் அனைவரும், வடநூல் முனிவரும், புகழ்ந்தது; வரம்பு இல்
எவ் உலகத்தோர் யாவரும், தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்ற
அவ் உலகத்தோர், இழிவதற்கு அருத்தி புரிகின்றது-அயோத்தி மா நகரம்.

செம்மையானவை, இனிமை பொருந்தியவையும் கூறும் நல்ல பொருளால் சிறந்தவையும், நுட்பமானவையும் ஆகிய இனிய சொற்களை கவர்ந்து கொண்ட கவிஞர்களாலும், வடமொழியில் வல்ல வான்மீகி முதலான முனிவர்கள் புகழப்பட்டது அயோத்தி நகரம். மேலும் அளவற்ற உலகங்கள் எல்லா வற்றிலும் வாழ்கின்றவர்கள் எல்லோரும் தவங்களைச் செய்து அடைவதற்கு விரும்புகின்ற அந்தப் பரமபதமாகிய வீட்டு உலகத்தவர்களும் பிறப்பதற்கு தகுந்த நகரம் இது. என்னும் விருப்பத்திற்கு உரியது அயோத்தியாகிய பெருமைக்குரிய நகரமேயாகும்.

நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ! நிறை நெடு மங்கல நாணோ!
இலகு பூண் முலைமேல் ஆரமோ! உயிரின் இருக்கையோ! திருமகட்கு இனிய
மலர்கொலோ! மாயோன் மார்பில் நன் மணிகள் வைத்த பொற் பெட்டியோ! வானோர்
உலகின் மேல் உலகோ! ஊழியின் இறுதி உறையுளோ! யாது என உரைப்பாம்?

அயோத்தி நகரமானது நிலமகளது முகமோ! முகத்திலணிந்த திலகமோ! அவளுடைய கண்களோ! நிறைவான நெடிய திருமாங்கலியக் கயிறோ? மார்பகங்களின் மேலணிந்து திகழும் மணிமாலையோ!அந்நில மகளின் உயிர் இருக்கும் இருப்பிடமோ? திருமகளுக்கு வாழ்வதற்கினியதாமரை மலரோ! திருமாலின் மார்பிலணியும் நல்ல மணிகள் வைக்கப் பட்ட பொன் பெட்டி தானோ! விண்ணுலகினும் மேலான வைகுந்தமோ? யுகமுடிவில் உயிர்களெல்லாம் தங்கும் திருமாலின் திருவயிறோ?வேறு எதுவென கூறுவோம்?

உமைக்கு ஒரு பாகத்து ஒருவனும், இருவர்க்கு ஒரு தனிக் கொழுநனும், மலர்மேல்
கமைப் பெருஞ் செல்வக் கடவுளும், உவமை கண்டிலா நகர்அது காண்பான்,
அமைப்பு அருங் காதல் அது பிடித்து உந்த, அந்தரம், சந்திராதித்தர்
இமைப்பு இலர் திரிவர்; இது அலால் அதனுக்கு இயம்பல் ஆம் ஏது மற்று யாதோ!

உமாதேவியை இடப்பாகத்திலே கொண்டிருக்கும் சிவபெருமானும், பூமகள், நிலமகள் ஆகிய இருவருக்கும் ஒப்பற்ற கணவனாகிய திருமாலும், தாமரை மலரில் பொறுமையே பெருஞ் செல்வமாகக் கொண்டு வாழும் பிரமதேவனும், இவர்களே உவமை கூற முடியாத வேறு இந்நகரைக் காண்பதற்கு நகர் இல்லை என்பதால் தடுக்கொணாத விருப்பம் பிடித்துத் தள்ள வானத்திலே சந்திர. சூரியர்கள் இமைக்காதவர்களாகத் திரிகின்றனர் இதுவல்லாது அவர்கள் திரிவதற்குச் சொல்லக் கூடிய காரணம் வேறு எது?

அயில் முகக் குலிசத்து அமரர்கோன் நகரும், அளகையும் என்று இவை, அயனார்
பயிலுறவு உற்றபடி, பெரும்பான்மை இப் பெருந் திரு நகர் படைப்பான்;
மயன் முதல் தெய்வத் தச்சரும் தம்தம் மனத் தொழில் நாணினர் மறந்தார்;-
புயல் தொடு குடுமி நெடு நிலை மாடத்து இந் நகர் புகலுமாறு எவனோ?

கூர்மையான முகத்தை உடைய வச்சிரப்படை கொண்ட தேவேந்திரனது அமராவதி நகரும், குபேரனது நகரமான அளகாபுரியும், ஆகிய இரு நகரங்களையும் பிரமன் படைத்தது பயிற்சி பெறும்படியாகும். மிகச் சிறப்புடைய இந்தப் பெருநகரைப் படைப்பதற்கு மயன் முதலான தேவஉலகச் சிற்பிகளும் தமது நினைப்பு மாத்திரத்தில் படைக்கும் தொழிலை மறந்து விட்டவர்களாக, அயோத்தியை ஒத்த நகரைப் படைக்க இயலாமைக்கு வெட்கமுற்று நிற்பர். மேகங்களை தொடுமளவு நீண்ட மேல் நிலைகளை கொண்ட மாடங்களை உடைய இந்த அயோத்தி மாளிகைகளின் சிறப்பைச் சொல்வது எவ்வாறு?

'புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம்' என்னும் ஈது அரு மறைப் பொருளே;
மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார்?
எண் அருங் குணத்தின் அவன், இனிது இருந்து, இவ் ஏழ் உலகு ஆள் இடம் என்றால்,
ஒண்ணுமோ, இதனின் வேறு ஒரு போகம் உறைவு இடம் உண்டு என உரைத்தல்?

இம்மையில் புண்ணியம் செய்தவர்கள் மறுமையில் சுவர்க்கம் அடைவார்கள். இது வேதங்கள் கூறும் கருத்தாகும். இராம பிரானை அல்லாது வேறு யார் இந்த உலகத்திலே சிறந்த தவத்தை அறத்துடனே வளர்த்தவர்கள் இருக்கிறார்களா? நினைப்பதற்கரிய நற்குணங்களை உடைய அந்த இராமபிரான் இருந்து இந்த ஏழுலகத்தினையும் ஆளும் இடம் அயோத்தி என்றால் இதைவிடவும் மேலான இன்பம் உள்ள இடம் உண்டு எனக் கூற இயலுமோ?

தங்கு பேர் அருளும் தருமமும், துணையாத் தம் பகைப் புலன்கள் ஐந்து அவிக்கும்
பொங்கு மா தவமும், ஞானமும், புணர்ந்தோர் யாவர்க்கும் புகலிடம் ஆன
செங் கண் மால் பிறந்து, ஆண்டு, அளப்ப அருங் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால்,
அம் கண் மா ஞாலத்து இந் நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ?

தம்மிடம் தங்கிய மிகுந்த கருணையும் அறமுமே துணையாகக் கொண்டு தமக்குப் பகையாகிய புலன்களைக் கட்டுப்படுத்துபவராகி மேன்மேலும் வளர்கின்ற தவத்தையும் மெய்யறிவையும் பெற்றிருக்கும் மேலோர்கள் யாவருக்கும் அடைக்கலமாக அடையத்தக்க, அழகிய கண்களை உடைய திருமால் அவதரித்து அங்கு (அயோத்தி நகரில்) அளவிட இயலாத பலகாலம் இலக்குமி தேவியின் அவதாரமான சீதா பிராட்டியுடன் சிறப்போடு தங்கி இருந்தான் என்றால் அழகிய விசாலமான இவ்வுலகிலே இந்த அயோத்திக்கு நிகரான அழகிய நகரம் தேவ உலகில்தான் எது இருக்கிறது?

நகர மதிலின் மாட்சி

நால் வகைச் சதுரம் விதி முறை நாட்டி நனி தவ உயர்ந்தன, மதி தோய்
மால் வரைக் குலத்து இனி யாவையும் இல்லை; ஆதலால், உவமை மற்று இல்லை;
நூல் வரைத் தொடர்ந்து, பயத்தொடு பழகி, நுணங்கிய நுவல அரும் உணர்வே
போல் வகைத்து; அல்லால், 'உயர்வினோடு உயர்ந்தது' என்னலாம்-பொன் மதில் நிலையே.

நான்கு சதுரமாகச் சிற்பநூல் விதிப்படியே நாட்டப் பட்டு மிகவும்உயர்ந்துள்ள மதில்கள் போன்ற குளிர்ந்த பெரிய மலைக் கூட்டத்தின் எந்த மலையும் இங்கில்லை. ஆதலால் மதிலுக்கு உவமை கூற வேறு எதுவும் இல்லை. அழகிய அந்நகரத்து மதில்களின் நிலைமை பற்றிச் சொல்லுவோமானால் ஞான நூல்களின் எல்லை வரைசென்று கற்றறிதலோடு நில்லாமல் பயனாகப் பெற்று உணர்ந்து அவற்றின் நுணுக்கமாகியதும், கூறுதற்கரியதும் ஆகிய மெய்யுணர்வையே போன்ற தன்மை உடையதல்லாமல் அந்த மெய்யுணர்வைப் போலவேஉயர்ந்தது என்றும் கூறலாம்.


மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால், வேதமும் ஒக்கும்; விண் புகலால்,
தேவரும் ஒக்கும்; முனிவரும் ஒக்கும், திண் பொறி அடக்கிய செயலால்;
காவலின், கலை ஊர் கன்னியை ஒக்கும்; சூலத்தால், காளியை ஒக்கும்;
யாவையும் ஒக்கும், பெருமையால்; எய்தற்கு அருமையால், ஈசனை ஒக்கும்.

அடைதற்கறிய அறிவால் எல்லை காண முடியாத படியிருப்பதால் வேதத்துக்கு ஒப்பாகும். விண்ணுலகம் வரை சென்றிருப்பதால் தேவர்களையும் ஒத்திருக்கும். வலிய பொறிகளை உள்ளடக்கிய செயலால் முனிவர்களை ஒத்திருக்கும். காக்கும் தொழிலால் மானை ஊர்தியாகக் கொண்ட துர்க்கையை ஒக்கும். சூலம் ஏந்தி இருப்பதால் காளிதேவியை ஒத்துக் காணப்படும். பெருமை மிக்க எல்லாவற்றையுமே ஒத்திருக்கும் அருமையால் ஈசனை ஒக்கும். எவரும் எளிதில் அடைய இயலாதிருப்பதால் இறைவனை ஒத்திருக்கும்.


பஞ்சி, வான் மதியை ஊட்டியது அனைய படர் உகிர், பங்கயச் செங் கால்,
வஞ்சிபோல் மருங்குல், குரும்பைபோல் கொங்கை, வாங்குவேய் வைத்தமென் பணைத் தோள்,
அம் சொலார் பயிலும் அயோத்தி மா நகரின் அழகுடைத்து அன்று என அறிவான்,
இஞ்சி வான் ஓங்கி, இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்துளதே!

செம்பஞ்சுக் குழம்பைப் பூசி, வெண்மையான சந்திரனை ஒழுங்கு பெற வைத்ததை ஒத்த ஒளி வீசும் நகங்களை உடைய தாமரை போன்ற சிவந்த பாதங்களையும், வஞ்சிக கொடி போன்ற இடையையும், தென்னங்குரும்பை போன்ற தனங்களையும், வளைந்த மூங்கில் போன்ற மென்மையான பருத்த தோள்களையும், உடைய அழகிய சொற்கள உடைய மகளிர் நிறைந்திருக்கின்ற அயோத்தியாகிய சிறந்த நகரை விட அழகுடையதோ அல்லவோ என்று அறிவதற்காகவே அந்நகரத்து மதில்கள் ஆகாய மளவு உயர்ந்து தேவர்கள் வாழும் உலகைக் காண எழுந்ததை ஒத்து உயர்ந்துள்ளது.

கோலிடை உலகம் அளத்தலின், பகைஞர் முடித் தலை கோடலின், மனுவின்
நூல் நெறி நடக்கும் செவ்வையின், யார்க்கும் நோக்க அருங் காவலின், வலியின்,
வேலொடு வாள், வில் பயிற்றலின், வெய்ய சூழ்ச்சியின், வெலற்கு அரு வலத்தின்,
சால்புடை உயர்வின், சக்கரம் நடத்தும் தன்மையின்,-தலைவர் ஒத்துளதே!

செங்கோலால் உலகத்தைக் காப்பதாலும், அளவுகோலால் அளக்கப் படுதலாலும், பகை மன்னரின் மகுடமணிந்த தலைகளை அழிப்பதாலும் தன்னிடமுள்ள இயந்திரங்களால் பகைவர்தலைகளைத் துண்டிப்பதாலும், மனுநூல் நெறிப்படி நடக்கின்ற நேர்மையாலும், சிற்ப நூலின்படி அமைந்து நேராயிருப்பதலும், எளிதில் எவரும் காண இயலாத காவல் உடையதாலும், வலிமை மிக்க வேல்முதலிய படைக்கலப் பயிற்சி உடைமையாலும் (வீரர்கள் வேல் முதலியபடைக் கலங்களைப் பயில்வதாலும்) கொடியதந்திரம் கொண்டிருப்பதாலும், மற்றவர்களால் வெல்ல இயலாத வல்லமை உடையதாலும், சிறப்பு மிக்க உயர்வுடைமையாலும் ஆணை செலுத்தும் தன்மையாலும் அந்த மதில் சூரிய குலத் தலைவர்களை ஒத்து இருக்கிறது.

சினத்து அயில், கொலை வாள், சிலை, மழு, தண்டு, சக்கரம், தோமரம், உலக்கை,
கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல், என்று இவை கணிப்பு இல் கொதுகின்
இனத்தையும், உவணத்து இறையையும், இயங்கும் காலையும், இதம் அல நினைவார்
மனத்தையும், எறியும் பொறி உள என்றால், மற்று இனி உணர்த்துவது எவனோ?

சினம் மிக்க வேலும், பகைவரைக் கொல்லும் வாளும், வில்லும், மழுவும், கதையும், சக்கரம், தோமரம், உலக்கை ஆகியவையும் மேகத்திலுள்ள இடியும், அஞ்சும்படியான கவண்கல்லும், என்று கூறப்படும் படைக்கலங்கள் அளவிட முடியாதவை. கொசுக்களின் கூட்டத்தையும், பறவைகளின் வேந்தனான கருடனையும், விரைந்து செல்லும் காற்றையும், நன்மை யல்லாதவைகளை நினைப்பவர் மனத்தினையும், கொல்லவல்ல இயந்திரங்களும், அந்த மதிலில் உள்ளன என்றால் மதிலின் காவலைப் பற்றி விரித்துரைக்க என்ன இருக்கிறது.

'பூணினும் புகழே அமையும்' என்று, இனைய பொற்பில் நின்று, உயிர் நனி புரக்கும்,
யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கும் இரவிதன் குலமுதல் நிருபர்-
சேணையும் கடந்து, திசையையும் கடந்து,- திகிரியும், செந் தனிக் கோலும்,
ஆணையும் காக்கும்; ஆயினும், நகருக்கு அணி என இயற்றியது அன்றே.

அணிகலன்களை விடப் புகழே சிறந்த அணிகலமாக அமையும் என நினைத்து இத்தகைய நல்லொழுக்கத்தில் நின்று நாட்டு மக்களைக் காப்பவரான, அழகிய எட்டுத் திசைகளிலும் உள்ள இருள் நீங்கும்படி ஒளிர்கின்ற சூரிய குலத்தில் தோன்றிய அரசர்களின் ஆணையாகிய சக்கரமும், செங்கோலும் கட்டளையும் மேலுலகத்தையும் திசைகளையும் கடந்து சென்று காக்கவல்லது. ஆனாலும் அந்தமாநகருக்கு அழகு செய்ய அமைந்தது அம்மதில் மட்டுமே.

ஆழ்ந்த அகழியின் மாண்பு

அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலைகடல் சூழ்ந்தன அகழி,
பொன் விலை மகளிர் மனம் எனக் கீழ் போய், புன் கவி எனத் தெளிவு இன்றி,
கன்னியர் அல்குல்-தடம் என யார்க்கும் படிவு அருங் காப்பினது ஆகி,
நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது;-நவிலலுற்றது நாம்.

நாம் இப்போது சிறப்பித்துச் சொல்ல வந்தது அம்மதிலின் புறத்தே அமைந்த அகழியானது, மேலே கூறப்பட்ட அத்தகையபெரிய மதிலை அலைகள் பொங்கும் பெரும் புறக்கடல் சூழ்ந்திருப்பது போலச் சூழ்ந்து விலை மாதர்களது மனத்தைப் போல மிகக் கீழே போய், இழிந்த பாடல்களைப் போல தெளிவு இல்லாமல், கன்னியரின் அல்குலினிடம் போல, எவருக்கும் நெருங்க இயலாத காவலை உடைய தாய்நல்ல நெறியில் செல்ல விடாமல் தடுக்கும் ஐம்பொறிகளைப் போன்றதாகிய எதிரிகளைத் தாக்கும் முதலைகளை உடையது.

ஏகுகின்ற தம் கணங்களோடும் எல்லை காண்கிலா,
நாகம் ஒன்று அகன் கிடங்கை நாம வேலை ஆம் எனா,
மேகம், மொண்டு கொண்டு எழுந்து, விண் தொடர்ந்த குன்றம் என்று,
ஆகம் நொந்து நின்று தாரை அம் மதிற்கண் வீசுமே.

தம் கூட்டத்துடனே செல்லும் மேகங்கள் எல்லை காண இயலாத, நாக லோகம்வரை ஆழ்ந்துள்ள பரந்த அகழியை அச்சத்தைத் தரும் கடலாகும் எனக் கருதி, நீரை முகந்துகொண்டு எழுந்து அம்மதிலை வானளவும் உயர்ந்த மலை என்று கருதி, உடல் வருந்தி அம்மதிலின் மீது நின்று மழைத் தாரையை அம் மதிலின்மீது பொழியும்.

அந்த மா மதில் புறத்து, அகத்து எழுந்து அலர்ந்த, நீள்
கந்தம் நாறு பங்கயத்த கானம், மான மாதரார்
முந்து வாள் முகங்களுக்கு உடைந்து போன மொய்ம்பு எலாம்
வந்து போர் மலைக்க, மா மதில் வளைந்தது ஒக்குமே.

அந்தப் பெரிய மதிலின் வெளிப்புறமுள்ளஅகழியிலே தோன்றி மலர்ந்துள்ள நீள்மிகுந்த மணம் வீசும் தாமரைக்காடு பெருமையுடைய அந்தப்புரத்துப் பெண்களின் ஒளியுடைய முகங்களுக்கு முன்பு தோற்றுப் போனமையால் மீண்டும் மிக்க வலிமை கொண்டு வந்து போர் புரிவதற்கு அந்த மதிலை வளைத்துக் கொண்டிருப்பதை ஒக்கும்.

சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை சுற்றும் முற்று பார் எலாம்
போழ்ந்த மா கிடங்கிடைக் கிடந்து பொங்கு இடங்கர் மா,-
தாழ்ந்த வங்க வாரியில், தடுப்ப ஒணா மதத்தினால்,
ஆழ்ந்த யானை மீள்கிலாது அழுந்துகின்ற போலுமே.

ஆய்ந்து கட்டப்பட்ட நாஞ்சில் முதலிய உறுப்புகளை உடைய நகரைச் சுற்றிலும் உள்ள அந்த மதிலின் சுற்றிலும் நிறைந்திருக்கும் பாறைகளை எல்லாம் பிளந்துஅமைக்கப்பட்ட அந்தப் பெரிய அகழியிலே தங்கி மேலே எழும் முதலைகள் ஆழமானதும், கப்பல்களை உடையதும் ஆகிய கடலிலே தடுக்க இயலாத மதத்தினாலே உள்ளே அழுந்திய யானை மீள முடியாமல் அமிழ்ந்து எழுவன போலக் காணப்பெறும்

ஈரும் வாளின் வால் விதிர்த்து, எயிற்று இளம் பிறைக் குலம்
பேர மின்னி வாய் விரித்து, எரிந்த கண் பிறங்கு தீச்
சோர, ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து சீறு இடங்கா மா,-
போரில் வந்து சீறுகின்ற போர் அரக்கர் போலுமே.

அறுக்கும் ரம்பம் போன்ற வாலைஅசைத்து பற்களாகிய பிறைக்கூட்டம் ஒளி வீசுமாறு வாயைத் திறந்து கொண்டு பிரகாசிக்கும் கண்கள் தீப்பொறி சிதற ஒன்றை மற்றொன்று முந்திச் சென்று சீறுகின்ற முதலைகள் போர்க்களத்தே வந்து ஒருவருடன் ஒருவர் சினந்து போர் புரியும் அரக்கர்களை ஒத்திருக்கும்.

ஆளும் அன்னம் வெண் குடைக் குலங்களா, அருங் கராக்
கோள் எலாம் உலாவுகின்ற குன்றம் அன்ன யானையோ,
தாள் உலாவு பங்கயத் தரங்கமும் துரங்கமா,
வாளும், வேலும், மீனம் ஆக, -மன்னர் சேனை மானுமே.

அங்குத் திரியும் அன்னங்கள் வெண்குடைக் கூட்டங்களாகவும், உலாவித் திரியும் மலை போன்ற யானைகளாகவும், தாளுடன் அசையும் தாமரையை உடைய அலைகளே குதிரைகளாகவும், மீன்களே வாளும் வேலுமாகவும் அரசரின் படைகளை ஒத்திருக்கும்.

விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளி கட்டி, உள்ளுறப்
பளிங்கு பொன்-தலத்து அகட்டு அடுத்துறப் படுத்தலின்,
'தளிந்த கல்-தலத்தொடு, அச் சலத்தினை, தனித்துறத்
தெளிந்து உணர்த்துகிற்றும்' என்றல் தேவராலும் ஆவதே?

அந்த அகழியின் ஓரம் முழுவதும் வெள்ளியினாலே கட்டி முடித்து உள்ளிடமெல்லாம் பளிங்குக் கற்களைத் தள வரிசையாகப் பதித்திருப்பதாலே, பளிங்குக் கல்லால் தளவரிசை இடப்பட்ட நிலத்தோடு அந்த அகழியின் தெளிந்த தண்ணீரை தனியாக வேறு பிரிந்து இது நீர், இது பளிங்கு என்று தெளிவாகப் பிறர்க்கு உணர்த்துவோம். என்றுசொல்வதுதேவர்களாலும் இயலாததொன்றாகும்.

அகழியைச் சூழ்ந்த சோலை

அன்ன நீள் அகன் கிடங்கு சூழ்கிடந்த ஆழியைத்
துன்னி, வேறு சூழ்கிடந்த தூங்கு, வீங்கு, இருட் பிழம்பு
என்னலாம், இறும்பு சூழ்கிடந்த சோலை; எண்ணில், அப்
பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே.

அத்தகைய நீண்ட, பரந்த அகழியை சுற்றிக் கிடந்த சக்கரவாள மலையை நெருங்கி வேறாகச் சூழ்ந்து கொண்டிருக்கும் அசையாது, மிகுந்திருக்கும் இருள் கூட்டமோ என்று சொல்லத்தக்க காடு போன்று சூழ்ந்திருக்கும் சோலையை நினைத்தால் அந்த அழகிய மதிலுக்குஉடுத்திய நீல ஆடையைப் போலத் தோன்றும்

நால் வாயில் தோற்றமும், ஓவியப் பொலிவும்

எல்லை நின்ற வென்றி யானை என்ன நின்ற் முன்னம், மால்,
ஒல்லை, உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்த் வான்
மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறுறா வழக்கினால்
நல்ல ஆறு சொல்லும் வேதம் நாலும் அன்ன-வாயிலே.

அயோத்தி நகரத்துக் கோபுர வாயில்கள் நான்கும் நான்கு திசைகளிலும் நிற்கும் திக்கு யானைகள் என்னும்படி நின்றன. அன்றியும் திருமால் வாமனனாக வந்து விரைவாக திருவிக்கிரமனாகி விண்ணுலகத்தை அளந்த திருவடியை விட மேலும் வாயில்கள் உயர்ந்து நின்றன. வளம் நிறைந்தஉலகத்தவர் எல்லாம் நீதி தவறாது நடக்கச் செய்வதால் நல்ல நெறிகளைக் கூறும் நான்மறைகளையும் ஒத்திருந்தன.

தா இல் பொன்-தலத்தின், நல் தவத்தினோர்கள் தங்கு தாள்
பூ உயிர்த்த கற்பகப் பொதும்பர் புக்கு ஒதுக்குமால் -
ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ, வந்து அணைந்திடாது,
ஓவியப் புறாவின் மாடு இருக்க ஊடு பேடையே.

தனது உயிருக் கொப்பான ஆண் புறாவானது கூவி அழைக்கவும் அன்புடன் வந்து தழுவிக் கொள்ளாமல் அந்த வாயிலின் புறத்தே சித்திரத்தில் அமைந்துள்ள பெண் புறாவின் பக்கம் இருக்க, ஆண் புறா உடன் ஊடல் கொண்ட பெண்புறா குற்றமற்ற தேவ உலகிலே நல்ல தவம் செய்தவர்கள் தங்கியுள்ள தாளை உடையதும், மலர்கள் பூத்திருப்பதுமான கற்பகச் சோலையிலே சென்று மறைந்திருக்கும்.

எழு நிலை மாடம்

கல் அடித்து அடுக்கி, வாய் பளிங்கு அரிந்து கட்டி, மீது
எல்லுடைப் பசும் பொன் வைத்து, இலங்கு பல் மணிக் குலம்
வில்லிடைக் குயிற்றி, வாள் விரிக்கும் வெள்ளி மா மரம்
புல்லிடக் கிடத்தி, வச்சிரத்த கால் பொருத்தியே,

மணிக்கற்களைச் செதுக்கி அடுக்கிச் சுவரெழுப்பி முன்புறம் பளிங்குக் கற்களை அறுத்துக் கட்டி அதன் மேலே ஒளிவீசும் பொன்தகடு வேய்ந்து, விளங்குகின்ற பலவகை மணிகளை ஒளிவீசும்படி பொன்தகட்டில் பதித்து, ஒளியை பரப்புகின்ற வெள்ளியால் ஆன விட்டத்தை அதன் மீது பொருந்துமாறு வைத்து வைரத் தூண்களை அதன்மேலே நாட்டி.

மரகதத்து இலங்கு போதிகைத் தலத்து வச்சிரம்
புரை தபுத்து அடுக்கி, மீது பொன் குயிற்றி, மின் குலாம்
நிரை மணிக் குலத்தின் ஆளி நீள் வகுத்த ஒளிமேல்
விரவு கைத்தலத்தின் உய்த்த மேதகத்தின் மீதுஅரோ,

மரகதத்தால் செய்த விளங்கு போதிகைக் கட்டைகளின் வைரக் கற்களைக் குற்றமகற்றி அடுக்கி வைத்து மேலே பொன் தகட்டை வைத்து, மின்னல் போல விளங்கும் வரிசையான இரத்தினத் தொகுதியால் ஆகிய நீண்ட சிங்க உருவின் வரிசை மீது ஒழுங்கு பொருந்திய கைமரமாக வைக்கப்பட்ட கோமேதத்தின் மேலே

ஏழ் பொழிற்கும் ஏழ் நிலத்தலம் சமைத்ததென்ன, நூல்
ஊழுறக் குறித்து அமைத்த உம்பர் செம் பொன் வேய்ந்து, மீச்
சூழ் சுடர்ச் சிரத்து நல் மணித் தசும்பு தோன்றலால்,
வாழ் நிலக் குலக் கொழுந்தை மௌலி சூட்டியன்னவே.

ஏழு மேலுலகத்தவருக்கும் ஏழு இடங்களை ஏற்படுத்தி வைத்தது போல சிற்ப நூல் விதிப்படி ஆராய்ந்து அமைத்தனவான கோபுரங்கள் மேலே செம்பொன் தகடு வேயப்பட்டு, மேலுலகிலே சென்று ஒளிரும் சிகரத்திலே சிறந்த மாணிக்கக் கலசம் தோன்றுதலால் வாழுகின்ற பூமியாகிய இளம் பெண்ணை முடி சூட்டியது போலத் திகழும்.

மாளிகைகளின் அமைப்பும் எழிலும்
'திங்களும் கரிது' என வெண்மை தீற்றிய
சங்க வெண் சுதையுடைத் தவள மாளிகை-
வெங் கடுங் கால் பொர, மேக்கு நோக்கிய,
பொங்கு இரும் பாற்கடல்-தரங்கம் போலுமே.

சந்திரனும் கருமை நிறத்து என்று கூறுமளவுக்கு, வெண்மை நிறம் பொருந்தப் பூசிய சங்கிலிருந்து செய்த வெண்ணிறச் சுண்ணாம்புச் சாந்தால் அமைந்த வெள்ளை மாளிகைகள் கடுமையான பெருங்காற்று வீசுவதால், மேல் நோக்கி எழுந்து பொங்கும் பெரிய பாற்கடலின்அலைகளைப் போலக் காணப்படும்.

புள்ளி அம் புறவு இறை பொருந்தும் மாளிகை,
தள்ள அருந் தமனியத் தகடு வேய்ந்தன,
எள்ள அருங் கதிரவன் இள வெயிற் குழாம்
வெள்ளி அம் கிரிமிசை விரிந்த போலுமே.

நீக்குவதற்கரிய பொன் தகடுகள் மேலே வேயப்பட்டனவாகிய உடலில் புள்ளிகளை உடைய அழகிய மாடப் புறாக்கள் தங்கியிருக்கின்ற மாளிகைகள், அழகிய வெள்ளி மலையின் மீது இகழ்தற்கு அரிய சூரிய தேவனது இளையக்கதிர்கள் பரவியிருப்பது போலக் காணப்படும்.

வயிர நல் கால் மிசை, மரகதத் துலாம்,
செயிர் அறப் போதிகை, கிடத்தி, சித்திரம்
உயிர் பெறக் குயிற்றிய, உம்பர் நாட்டவர்
அயிர் உற இமைப்பன, அளவு இல் கோடியே.

வையிரத்தாலாகிய நல்ல தூண்களின் மேலே மரகதத்தாலாகிய உத்தரத்தை குறையின்றிப் பொருந்துமாறு போதிகையின் மீது பொருத்தி ஓவியங்கள் உயிருள்ளன போலத் தோன்றுமாறு செய்தனவும். தேவ நாட்டவரும் தமது விமானமோ என ஐயத்துடன் நோக்குவனவும் ஆகிய மாளிகைகள் அளவற்ற கோடிக் கணக்கானவையாகும்.

சந்திர காந்தத்தின் தலத்த, சந்தனப்
பந்தி செய் தூணின்மேல் பவளப் போதிகை,
செந் தனி மணித் துலாம் செறிந்த, திண் சுவர்
இந்திர நீலத்த, எண் இல் கோடியே.

சந்திர காந்த்க் கற்கள் பரப்பிய தரையை உடையனவும், சந்தன மரங்களான வரிசையாக உள்ள தூண்களின் மீது பவளத்தால் செய்த போதிகையில் சிவந்த மாணிக்கத்தாலான உத்தரம் பொருந்தி உள்ளனவும், வண்மை மிக்க சுவர்கள் இந்திர நீலமணிகளால் அமைந்தனவுமான மாளிகைகள் எண்ண முடியாத கோடியாகும்.

பாடகக் கால் அடி பதுமத்து ஒப்பன,
சேடரைத் தழீஇயின, செய்ய வாயின,
நாடகத் தொழிலின, நடுவு துய்யன,
ஆடகத் தோற்றத்த, அளவு இலாதன.

வேலைப் பாடமைந்த தூண்களின் அடிப்பக்கம் தாமரை மலர் வடிவத்தில் அமைந்தனவும், கடைக்கால் ஆழத்தால் நாக உலகை தழுவியுள்ளனவும், வேலைப் பாட்டினால் செம்மை உடையனவும், யாவரும் விரும்பிக் காணும் தொழில் திறம் உடையனவும், நடுவிடம் எல்லாம் தூய்மை உடையனவும், பொன்னைப் போன்ற தோற்றமுடையனவும் ஆகிய மாளிகைகள் அளவற்றனவாம்.

புக்கவர் கண் இமை பொருந்துறாது, ஒளி
தொக்குடன் தயங்கி, விண்ணவரின் தோன்றலால்,
திக்குற நினைப்பினில் செல்லும் தெய்வ வீடு
ஒக்க நின்று இமைப்பன, உம்பர் நாட்டினும்.

பார்க்கப் வந்தவரகண் இமைகள் வியப்பின் மிகுதியால் மலர்ந்து விளங்குமே அல்லாது ஒன்றுடன் ஒன்று சேரா கண் கொட்டாமல் பார்த்தனர் என்பது கருத்து. மாளிகைகளில் பதித்த இரத்தினங்களின் பூசிய வெண்சாந்தின் ஒளி பார்ப்பவர் உடலின் மீது பாய்வதால் அவர்கள் விளகம் பெற்று தேவர்களைப் போல காட்சியளிப்பதாலும், எல்லாத் திசைகளிலும் செல்ல வல்ல தெய்வீக விமானம்போல நிலத்தில் பதிந்து கிடக்கும் அம்மாளிகைகளின் ஒளி வெள்ளம் தேவர் உலகத்தும் சென்று ஒளி வீசுவன.

அணி இழை மகளிரும், அலங்கல் வீரரும்,
தணிவன அறநெறி; தணிவு இலாதன
மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது
பணி பிறிது இயன்றில் பகலை வென்றன.

அழகிய அணிகலன்களை அணிந்த பெண்களும் மாலையணிந்த மார்பினரான வீரர்களும், அற நெறியினையே துணிவுடன் பற்றுவர். மணிகளாலும், பொன்னாலும் புனையப்பட்டுள்ள மாளிகைகள் என்றும் அறநெறிகளில் குறையாது நிறைந்திருப்பவை. வேறுகல், மண் முதலியவைகளால் அவை கட்டப்பட்டவை. ஒளியால் சூரியனையும் வென்று விளங்குபவை.

வானுற நிவந்தன் வரம்பு இல் செல்வத்த்
தான் உயர் புகழ் எனத் தயங்கு சோதிய்
ஊனம் இல் அறநெறி உற்ற எண் இலாக்
கோன் நிகர் குடிகள்தம் கொள்கை சான்றன.

அந்நகரத்து மாளிகைகள் வானமளவும் உயரந்து இருப்பவை, அளவற்ற செல்வத்தை உடையன, எங்கும் பரவியுயர்ந்த புகழ் என்னும் படி விளங்கும் ஒளி உடையன, குற்ற மற்ற அரநெறியைக் கடைப்பிடித்து வாழும் அரசைனைப் போன்று வாழும் எண்ணிக்கை இல்லாத குடிமக்களது தன்மைக்குச் சான்றாக உள்ளனவாம்.

அருவியின் தாழ்ந்து, முத்து அலங்கு தாமத்த்
விரி முகிற்குலம் எனக் கொடி விராயின்
பரு மணிக் குவையன் பசும் பொன் கோடிய்
பொரு மயில் கணத்தன்-மலையும் போன்றன.

அம்மாளிகைகள் நீர் அருவி போலத் தாழ்ந்து அசையும் முத்து மாலைகளை உடையவை, பரந்த மேகக் கூட்டத்தை ஒத்த கொடிகள் பரவியுள்ளவை பெரிய மணிகளின் குவியல்களை உடையன. பசும்பொன் குவைகளை உடையன, வடிவொத்த மயில்களை உடையன.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக