நாட்டுப் படலம் -3தொடர்ச்சி..........

இடை இற, மகளிர்கள், எறி புனல் மறுகக்
குடைபவர், துவர் இதழ் மலர்வன, குமுதம்;
மடை பெயர் அனம் என மட நடை, அளகக்
கடைசியர் முகம் என மலர்வன, கமலம்.

தங்கள் இடை ஒடிவது போன்று பெண்கள், அலையடிக்கும் நீர் கலங்க நீராடுபவர்களின் பவளம் போன்ற சிவந்த உதடுகளை போல குமுத மலர்கள் மலர்கின்றனவாகும். நீர்மடைகளில் வாழும் அன்னங்களை போல மெல்லிய நடையையும், அழகிய கூந்தலையும் உடைய அந்நாட்டு தாமரை மலர்கள் மலர்வனவாகும்.

ஒப்பிலா மகளிர் விழி

விதியினை நகுவன, அயில் விழி; பிடியின்
கதியினை நகுவன, அவர் நடை; கமலப்
பொதியினை நகுவன, புணர் முலை, கலை வாழ்
மதியினை நகுவன, வனிதையர் வதனம்.

அந்நாட்டுப் பெண்களின் வேல் போன்ற கண்கள் நான்முகனைப் பழிப்பன. அவர்களது நடை பெண் யானைகளின் நடையைப் பழிப்பன.அப்பெண்களின் இணைந்துள்ள மார்புகள் தாமரை அரும்புகளைப் பழிப்பன. அவர்களது முகங்கள் கலைகளை உடைய சந்திரனைப் பழிப்பனவாகும்.

பகலினொடு இகலுவ, படர் மணி; மடவார்
நகிலினொடு இகலுவ, நளி வளர் இளநீர்;
துகிலினொடு இகலுவ, சுதை புரை நுiர் கார்
முகிலினொடு இகலுவ, கடி மண முரசம்.

பரவிக் கிடக்கின்ற மணிகள் சூரிய ஒளியுடன் மாறு கொண்டொளிர்வன. குளிர்ந்த இளநீர்கள் பெண்களின் தனங்களோடு மாறுபட்டு விளங்குவனவாம்.

பெருகித் திகழும் பல் வளம்

காரொடு நிகர்வன, கடி பொழில்; கழனிப்
போரொடு நிகர்வன, புணர்மலை; அணை சூழ்
நீரொடு நிகர்வன, நிறை கடல்; நிதி சால்
ஊரொடு நிகர்வன, இமையவர் உலகம்.

மேகங்களுடன் அந்தநாட்டுச் சோலைகள் ஒப்பனவாகும். வயல்களிலே குவித்து வைத்துள்ள நெற்போருடன் நெருங்கியமலைகள் ஒப்பனவாகும். அணைகளில் தேங்கிய நீர்த் தேக்கத்துடன் நீர் நிறைந்த கடல் ஒப்பதாகும். செல்வம் மிக்க அந்த நாட்டு ஊர்களோடு தேவர் உலகு ஒப்பதாகும்.

நெல் மலை அல்லன-நிரை வரு தரளம்;
சொல் மலை அல்லன-தொடு கடல் அமிர்தம்;
நல் மலை அல்லன-நதி தரு நிதியம்;
பொன் மலை அல்லன-மணி படு புளினம்.

அந்த நாட்டில் நெற் குவியல்களில்லாத இடங்களில் வரிசை வரிசையாக முத்துக் குவியல்கள் காணப்படும். அந்த முத்துக் குவியல்கள் இல்லாத இடங்களில் தோண்டப்பட்ட கடலில் எடுத்த உப்புக் குவியல்கள் நிறைந்திருக்கும். அந்த உப்புக் குவியல்கள் இல்லாத இடங்களில் நதிகளால் கொண்டுவந்து குவிக்கப்பட்ட பொன் முதலிய பொற் குவியல்களில் பல இடங்களில் மணிகள் நிறைந்த மணல் மேடுகள் இருக்கும்.

இளையவர் பந்து பயில் இடமும், ஆடவர் கலை தெரி கழகமும்

பந்தினை இளையவர் பயில் இடம்,-மயில் ஊர்
கந்தனை அனையவர் கலை தெரி கழகம்,-
சந்தன வனம் அல, சண்பக வனம் ஆம்;
நந்தன வனம் அல, நறை விரி புறவம்;

அந்நாட்டு இளம் பெண்கள் பந்து விளையாடும் இடங்கள் சந்தனச் சோலைகளே ஆயினும் அவர்களது மேனி மணத்தால் சண்பகச் சோலைகளாகும். முருகனை ஒத்த ஆடவர்கள் வில் முதலிய கலைகளைப் பயிலுமிடங்கள் பல மலர்களை உடைய நந்தனவனங்களே ஆயினும் ‘அவர்தம்’ மேனி மணத்தால் முல்லைக் காடுகளாக விளங்கும்.

மடவாரின் பேச்சழகும், காட்சிப் பொருள்களும்

கோகிலம் நவில்வன, இளையவர் குதலைப்
பாகு இயல் கிளவிகள்; அவர் பயில் நடமே
கேகயம் நவில்வன் கிளர் இள வளையின்
நாகுகள் உமிழ்வன, நகை புரை தரளம்.

குயில்கள் கற்றுப் பேசுவன அந்நாட்டுப் பெண்களின் பாகு போன்ற இனியனவாகிய மழலைச் சொற்களையாம். மயில்கள் நடந்து பழகுவன அப்பெண்களின் நடையையாம். விளங்கும் இளம்பெண் சங்குகள் உமிழ்வது அப்பெண்களின் பற்களை ஒத்த முத்துக்களையேயாம்.

பழையர்தம் மனையன, பழ நறை; நுகரும்
உழவர்தம் மனையன, உழு தொழில்; புரியும்
மழவர்தம் மனையன, மணஒலி; இசையின்
கிழவர்தம் மனையன, கிளை பயில் வளை யாழ்.

பழமையன கள். கள் விற்பவர்களின் வீடுகளில் உள்ளது. அந்தக் கள்ளைப் பருகும் உழவர்கள் வீடுகளில உழவுத் தொழிலுக்கான கருவிகள் உள்ளன. மணம் புரியும் இளைஞர் இல்லங்களில் மணவாத்தியங்கள் ஒலிக்கின்றன. இசைவல்ல பாணர் வீடுகளில் கிணை என்ற நரம்பினையுடைய வளைந்த யாழ்கள் உள்ளன.

கோதைகள் சொரிவன, குளிர் இள நறவம்;
பாதைகள் சொரிவன, பரு மணி கனகம்;
ஊதைகள் சொரிவன, உறை உறும் அமுதம்;
காதைகள் சொரிவன, செவி நுகர் கனிகள்;

மலர் மாலைகள் இனியதேனைப் பொழிவனவாம் வணிகத்துக்குரிய கப்பல்கள் பெரிய மணிகளையும், பொன்னையும் கொண்டு வந்து குவிப்பனவாம். காற்று உயிர்காக்கும் அமுதத் துளிகளைச் சொரிவனவாம். கவிஞர்களின் காப்பியங்கள் செவிக்கினிய பாடல்களைத் தருவனவாம்.

இடம் கொள் சாயல் கண்டு, இளைஞர் சிந்தைபோல்,
தடங் கொள் சோலைவாய், மலர் பெய் தாழ் குழல்
வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும்
தொடர்ந்து போவன-தோகை மஞ்ஞையே.

தோகையை உடைய ஆண் மயில்கள் விசாலமான சோலையினிடத்தே தமது பெண் மயில்களின் பெருமைக்குரிய சாயலைப் பார்த்து இளம் வயதினரான ஆண்களின் மனத்தைப் போல மலரணிந்த நீண்ட கூந்தலையும், முத்து மாலைகளைஅணிந்த தனங்களையும் உடைய அந்தப் பெண்களுடனே பின்தொடர்ந்து செல்வனவாம்.

நாட்டில் வறுமை முதலியன இல்லாமை

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.

அந்த நாட்டில் வறுமை சிறிதும் இல்லாததால் கொடைக்கு அங்கே இடமில்லை. நேருக்கு நேர் போர்புரிபவர் இல்லாததால் உடல் வலிமையை எடுத்துக்காட்ட வாய்ப்பில்லை. பொய்ம் மொழி இல்லாமையால் மெய்ம்மை தனித்து விளங்கவில்லை. பலவகைக் கேள்விச் செல்வம் மிகுந்து விளங்குவதால் அறியாமை இல்லை.

எள்ளும், ஏனலும், இறுங்கும், சாமையும்,
கொள்ளும் கொள்ளையில் கொணரும் பண்டியும்,
அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும்,
தள்ளும் நீர்மையின், தலைமயங்குமே.

எள்ளும், தினையும், சோளமும், சாமையும், கொள்ளும் மிகுதியாகக் கொண்டு வரும் வண்டிகளும் சேறு நிறைந்த உப்பளத்திலிருந்து உப்பைக் கொண்டு வரும் வண்டிகளும் பார மிகுதியால் இயல்பாக ஓட்டிச் செல்ல இயலாது ஆட்கள் தள்ளும் தன்மையால் ஒன்றுடன் ஒன்று கலப்பனவாம்

உயரும் சார்வு இலா உயிர்கள் செய் வினைப்
பெயரும் பல் கதிப் பிறக்குமாறுபோல்,
அயிரும், தேனும், இன் பாகும், ஆயர் ஊர்த்
தயிரும், வேரியும், தலைமயங்குமே.

உயர் கதியான வீடு பேறடைவதற்கு உரிய ஞானமில்லாத உயிர்கள் தாம் செய்த வினைப் பயனைத் துய்க்க மாறி மாறிப் பல பிறவிகளிலும் பிறக்கும். அது போல் சர்க்கரையும், தேனும், இனிய பாகும் இடையர் ஊர்களில் கிடைக்கும் தயிரும், கள்ளும் இடம் மாறுபடும்.

விழாவும் வேள்வியும்

கூறு பாடலும், குழலின் பாடலும்,
வேறு வேறு நின்று இசைக்கும் வீதிவாய்,
'ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம்' என,
சாறும் வேள்வியும் தலைமயங்குமே.

இசை வல்லுநர் பாடுகின்ற வாய்ப்பாட்டும் புல்லாங் குழலால் இசைக்கும் பாட்டும் தனித்தனியாக நின்று ஒலிக்கும். வீதிகளிலே ஒரு ஆறு, மற்றொரு ஆற்றுடன் வந்து எதிர்ப் பட்டதெனக் கூறுமாறு விழாவுக்காகவும் திருமணத்துக்காகவும் வரும் மக்கள் கூட்டம் கலக்கும்.

மூக்கில் தாக்குறும் மூரி நந்தும், நேர்
தாக்கின் தாக்குறும் பறையும், தண்ணுமை
வீக்கின் தாக்குறும் விளியும், -மள்ளர்தம்
வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே.

மூக்கில் வாய்வைத்து ஊதப்படும் வலிய சங்கு வாத்தியத்தின் ஒலியும், நேரான குறுந்தடியால் தாக்கப்படும் பறையினது ஓசையும், வாரால் பிணிக்கப்பட்ட மத்தள முழக்கமும், உழவர்கள் உழவு மாடுகளை அதட்டும் ஒலிக்குள்ளே அடங்கிவிடும்.

குழந்தைக்கு பால் ஊட்டும் தாய்

தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப்
பாலின் ஊட்டுவார் செங் கை, பங்கயம்
வால் நிலா உறக் குவிவ மானுமே.

ஐம்படைத் தாலி அணிந்திருக்கும் மார்பிலே சீராக, வாயிலிருந்து ‘சொள்ளு’ ஒழுகும் குழந்தைகளுக்கு பாலமுதைப் புகட்டும் பெண்களின் அழகிய கைகள்தாமரை மலர்கள். நிலவு எழுதலால் குவிவதை ஒத்திருக்கும்.

மக்களின் ஒழுக்கத்தால் அறம் நிலைபெறுதல்

பொற்பின் நின்றன, பொலிவு; பொய் இலா
நிற்பின், நின்றன, நீதி; மாதரார்
அற்பின் நின்றன, அறங்கள்; அன்னவர்
கற்பின் நின்றன, கால மாரியே.

அந்த நாட்டு மக்களின் அகத்தழகால் நிலைத்திருந்தது புறத்தழகு. அவர்களது பொய்ம்மை இல்லாத மெய்ந்நிலையால் நீதி நிலைத்து நின்றது. அந்தநாட்டுப் பெண்களின் அன்பால் அறங்கள் நிலைபெற்றிருந்தன. அப்பெண்களது கற்பினால் பருவமழை நிலைத்திருந்தது.

சோலை மா நிலம் துருவி, யாவரே
வேலை கண்டு தாம் மீள வல்லவர்?-
சாலும் வார் புனல் சரயுவும், பல
காலின் ஓடியும் கண்டது இல்லையே!

சோலைகள் சூழ்ந்த அக் கோசலநாட்டைத் துருவிச் சென்று அதன் எல்லையைக் கண்டு மீண்டு வர வல்லவர் யாருளர்? மிகுந்த நீரை உடைய அந்நாட்டு நதியாகிய சரயு நதியும், பல கால்வாய்களால் ஓடிச் சென்றும் அந்த நாட்டின் எல்லையைக் கண்டதில்லை.

வீடு சேர, நீர் வேலை, கால் மடுத்து
வீடு சேர, நீர் வேலை, கால் மடுத்து
ஊடு பேரினும், உலைவு இலா நலம்
கூடு கோசலம் என்னும் கோது இலா
நாடு கூறினாம்; நகரம் கூறுவாம்.

நிலம் முழுவதும் அழியுமாறு கடல் பெருங்காற்றால் மோதுண்டு வந்தாலும் அழியாத நன்மைகள் சேர்ந்த கோசலம் என்று குற்றமற்ற நாட்டின் சிறப்பைச் சொன்னோம். இனி அந்தநாட்டின் தலைநகரான அயோத்தி மாநகரின் சிறப்பைச்சொல்லுவோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக