நாட்டுப் படலம்-2தொடர்ச்சி................

செல்வச் செழிப்பு

பருவ மங்கையர் பங்கய வாள் முகத்து
உருவ உண் கணை, 'ஒண் பெடை ஆம்' எனக்
கருதி, அன்பொடு காமுற்று, வைகலும்,
மருத வேலியின் வைகின, வண்டுஅரோ.

ஆண் வண்டுகள் இளம் பெண்களின் தாமரை போன்ற ஒளி கொண்ட முகத்தில் உள்ள அழகுடையனவும் மை இடப்பட்டனவுமாகிய கண்களை ஒளி கொண்ட பெண் வண்டுகள் என்று நினைத்து அன்போடு விரும்பி நாளெல்லாம் மருத நிலத்திலே தங்கின.

வேளை வென்ற முகத்தியர் வெம் முலை,
ஆளை, நின்று முனிந்திடும், அங்கு ஒர் பால்;
பாளை தந்த மதுப் பருகி, பரு
வாளை நின்று மதர்க்கும் மருங்கு எலாம்.


அந்த மருத நிலத்தின் ஒரு பக்கத்தில் மன்மதனையும் வெற்றி கொண்ட முகத்தை உடைய (உழவர் குலப்) பெண்களின் விருப்பத்தைக் கிளரச் செய்யும் மார்பகங்கள்ஆண்களை எதிர்த்து நின்று பணியச் செய்யும். பக்கங்களிலெல்லாம் பாளைகளிலிருந்து வடியும் மதுவைக் குடித்து பெரிய வாளை மீன்கள் விறைப்புடன் செருக்கும்.

ஈர நீர் படிந்து, இந் நிலத்தே சில
கார்கள் என்ன, வரும், கரு மேதிகள்;
ஊரில் நின்ற கன்று உள்ளிட் மென் முலை
தாரை கொள்ள, தழைப்பன சாலியே.


குளிர்ந்த நீரிலே மூழ்கி எழுந்து வானத்தில் அல்லாது இந்த நிலத்திலே சில மேகங்களைப் போல கருமை நிறமுள்ள எருமைகள் நடமாடும் ஊரிலே தங்கிவிட்ட கன்றை நினைப்பதாலே மென்மையான மடியிலிருந்து பால் தாரை சொரிவதால் அந்தப் பாலால் செந்நெற் பயிர்கள் தழைக்கின்றன.

முட்டு இல் அட்டில், முழங்குற வாக்கிய
நெட்டுலைக் கழுநீர் நெடு நீத்தம் தான்,
பட்ட மென் கமுகு ஓங்கு படப்பை போய்,
நட்ட செந் நெலின் நாறு வளர்க்குமே.


வேண்டும் பொருள்களில் குறைவு இல்லாத சமையல் அறையில் ஒலித்தல் பெருகும்படி கீழேவடிக்கப் பட்ட பெரிய உலையில் வைப்பதற்கு முன் (அரிசி) கழுவிய நீரின் மிக்க வள்ளமானது நீரோடைக் கரையில் உள்ள பாக்கு மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள சோலை வழியே சென்று வயலில் நடப்பட்டுள்ள செந்நெல் நாற்றுகளை வளர்க்கும்.

சூட்டுடைத் துணைத் தூ நிற வாரணம்
தாள்-துணைக் குடைய, தகை சால் மணி
மேட்டு இமைப்பன் 'மின்மினி ஆம்' எனக்
கூட்டின் உய்க்கும், குரீஇயின் குழாம் அரோ.

உச்சிக் கொண்டை உடையதும் தூய நிறத்தையுடைய சேவல்கள் தம் கால்களால் குப்பைகளைக் குடைவதால் தகுதி மிக்க மாணிக்கங்கள் அந்த குப்பை மேடுகளில் ஒளிரும். குருவிக்கூட்டம் அந்த மணிகளை மின்மினி பூச்சி என்று நினைத்துதம் கூடுகளில் கொண்டு போய் வைக்கும்.

தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும்,
ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும்,

தேயும் நுண் இடை சென்று வணங்கவும்,

ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார்.


தோய்ந்துள்ள வெண்மையான தயிரைக் கடைகின்ற மத்தின் ஓசை விட்டுவிட்டு ஒலிக்கவும் தம் கைகளில் அணிந்துள்ள நுட்பமான வேலைப்பாடுடைய வெண்ணிறச் சங்கு வளையல்கள் வாய் திறந்து கத்துவது போல ஒலிக்கவும் மெலிந்த சிறிய இடை முன்புறமாக வளையவும் இடைக்குல மகளிர் அழகிய கைகள் வருந்தும் படி கடைவார்கள்.

தினைச் சிலம்புவ, தீம் சொல் இளங் கிளி;
நனைச் சிலம்புவ, நாகு இள வண்டு; பூம்
புனைச் சிலம்புவ, புள் இனம்; வள்ளியோர்
மனைச் சிலம்புவ, மங்கல வள்ளையே.


இனிய சொற்களைப் பேசும் இளங்கிளிகள் தினைப் புனங்களிலே ஒலிப்பன. இளமையான வண்டுகள் மலர் அரும்புகளில் ஒலிப்பன. பறவைகளின் கூட்டம் நீர் நிலைகளில் ஒலிப்பன. கொடையாளர் இல்லங்களில் மங்கலமான உலக்கைப் பாடல்கள் ஒலிப்பன.


பெருகிக் கிடக்கும் நால் நில வளம்

குற்ற பாகு கொழிப்பன -கோள் நெறி
கற்றிலாத கருங் கண் நுளைச்சியர்

முற்றில் ஆர முகந்து, தம் முன்றிலில்,

சிற்றில் கோலிச் சிதறிய முத்தமே.


ஆடவரின் இதயம் கவர்ந்து கொள்ளும் வழியைக் கற்றறியாத கருமை நிறமான கண்களை உடைய நெய்தல் நிலத்துப் பெண்கள் தறிக்கப் பட்ட பாக்கிலிருந்து கொழித்து நீக்கப்படுபவைகளை சிறிய முறங்களில் வாரி வந்து தம் வீட்டின் முற்றத்தில் சிறு வீடு கட்டி சிந்துகின்ற முத்தங்களே யாகும்.

துருவை மென் பிணை ஈன்ற துளக்கு இலா
வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான்
உரும் இடித்தெனத் தாக்குறும் ஒல் ஒலி
வெருவி, மால் வரைச் சூல் மழை மின்னுமே.

செம்மறி இனத்தின் மென்மையான பெண் ஆடு பெற்ற அச்சம் காரணமாக அசைதல் இல்லாதனவும் வரிகள் அமைந்த இரு கொம்புகளை உடையனவும் வலிய தலைகளையும் உடைய கடாக்கள் மேகத்தில் உள்ள இடிஇடித்ததைப் போல ஒன்றை ஒன்று முட்டுதலால் எழும் ஒல்லென்ற ஒலி கேட்டு அஞ்சிபெரிய மலையில் படிந்துள்ளதும் சூல் கொண்டதுமான மேகம்மின்னலிடும்.

கன்றுடைப் பிடி நீக்கிக் களிற்றினம்
வன் தொடர்ப் படுக்கும், வன வாரி சூழ்
குன்றுடைக் குல மள்ளர் குழூஉக் குரல்,
இன் துணைக் களி அன்னம் இரிக்குமே.


கன்றுடைய பெண் யானைகளை நீக்கிவிட்டு ஆண் யானைகளை வலிய சங்கிலிகளால் கட்டுகின்ற காட்டிலே யானைகளை அகப்படுத்தும் இடங்களைச் சூழ்ந்த மலையை வாழும் இடமாகக் கொண்ட நல்ல வீரர்களின் கூட்டம் எழுப்பும் ஆரவாரம் இனிய துணையாகிய பெண் அன்னங்களுடன் மகிழ்ந்திருக்கும் ஆண் அன்னங்களை(அச்சத்தால் நிலைகெட்டு) ஓடச் செய்யும்.

வள்ளி கொள்பவர் கொள்வன, மா மணி;
துள்ளி கொள்வன, தூங்கிய மாங்கனி;
புள்ளி கொள்வன, பொன் விரி புன்னைகள்;
பள்ளி கொள்வன, பங்கயத்து அன்னமே.

வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுப்பவர்கள் பெறுவது உயர்ந்த மணிகளாகும் கிளைகளில் தொங்கும் மாம்பழங்கள் தேன் துளிகளைக் கொண்டிருக்கும். பொன்நிற மகரந்தங்களைப் பரப்பும் புன்னை மலர்கள் புள்ளிகளைப் பெற்றிருக்கும். அன்னப் பறவைகள் தாமரை மலர்களிலே தூங்கியிருக்கும்.

கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில்
கன்று உறக்கும்-குரவை, கடைசியர்,
புன் தலைப் புனம் காப்புடைப் பொங்கரில்
சென்று இசைக்கும் - நுளைச்சியர் செவ்வழி.

மருத நில மாதர்களின் குரவைக் கூத்துப் பாடல் கொன்றையாலும் மூங்கிலாலும் ஆகிய குழல்களை உடைய இடையர்களின் வீட்டு முற்றங்களில் கன்றுகளை உறங்கச் செய்யும். நெய்தல் நில மகளிர் பாடும் செவ்வழிப் பண் கொண்ட பாடல் சிற்றிடம் கொண்ட புனங்களிலும் காவல் உடைய சோலைகளிலும் பரந்து சென்று ஒலிக்கும்.

சேம்பு கால் பொரச் செங்கழுநீர்க் குளத்
தூம்பு கால, சுரி வளை மேய்வன-
காம்பு கால் பொர, கண் அகல் மால் வரை,
பாம்பு நான்றெனப் பாய் பசுந் தேறலே.


மூங்கில் புதரில் காற்று மோதுதலால் தேன்கூடு சிதைய விசாலமான பெரிய மலைகளிலிருந்து பாம்புகள் தொங்குவது பொன்ற தோற்றத்துடன் பாய்கின்ற புதிய தேன் ஒழுக்கினையே சேப்பங் கொடியின் மடல்கள் ஒடியும்படி செங்கழு நீர்ப் பூக்கள் கொண்ட குளத்தின் மதகுகளிலிருந்து பரவும் வாய்க்கால்களில் வளைந்த சங்குகள் மேய்கின்றன.

ஈகையும் விருந்தும்


பெருந் தடங் கண் பிறைநுதலார்க்கு எலாம்,
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்,
வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும்,

விருந்தும், அன்றி, விளைவன யாவையே?

பெரிய அகலமான கண்களை உடைய பிறை வடிவமான நெற்றியை உடைய பெண்களுக்கெல்லாம் நிலையாகப் பொருந்தியபொருட் செல்வமும் நூலறிவும் நிறைந்திருப்பதால் வறுமையால் வருந்தி, உதவி நாடி வந்தோர்க்கு வழங்குதலும் நாள்தோறும் விருந்து ஓம்புதலும் அல்லாது பெற்ற செல்வத்தாலும் சேர்த்த கல்வி அறிவாலும் விளைவன வேறு யாவை? (அவையே பயனாக விளைகின்றன என்பதுவினாவின் விடை)

ஊட்டிடத்தும் குடிகளிடத்தும் உள்ள பொருள்கள்


பிறை முகத் தலை, பெட்பின், இரும்பு போழ்,
குறை நறைக் கறிக் குப்பை, பருப்பொடு,
நிறை வெண் முத்தின் நிறத்து அரிசிக் குவை,
உறைவ-கொட்பின ஊட்டிடம் தோறெலாம்.


ஆரவாரம் மிக்கனவும் வந்தவருக்குஉணவு வழங்குவனவுமாகிய அறச்சாலைகளிலெல்லாம் விருப்பத்துடன் பிறை வடிவான தலையை உடைய அரிவாளால் பிளக்கப்பட்டு திருத்தப்பட்ட நறுமணமுடைய காய்கறிகளின் குவியலும், பருப்பு வகைகளும் நிறைந்த வெண்முத்துப் போன்ற அரிசிக் குவியல்களும் கிடக்கின்றன.

கலம் சுரக்கும், நிதியம்; கணக்கு இலா,
நிலம் சுரக்கும், நிறை வளம்; நல் மணி
பிலம் சுரக்கும்; பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும், ஒழுக்கம்-குடிக்கு எலாம்.

கோசல நாட்டு மக்களுக் கெல்லாம் செல்வத்தைக் கப்பல்கள் கொடுக்கும். நன்செயும் புன்செயும் ஆகிய நிலங்கள் அளவற்ற நிறை வளத்தைக் கொடுக்கும். சுரங்கங்கள் நல்ல இரத்தினங்களைக் கொடுக்கும். பெறுவதற்கு அரியதாகிய குலம் ஒழுக்கத்தைக் கொடுக்கும்.

நல்லவற்றின் நலனும், தீயன செய்யாமையும்


கூற்றம் இல்லை, ஓர் குற்றம் இலாமையால்;
சீற்றம் இல்லை, தம் சிந்தையின் செம்மையால்;
ஆற்ற நல் அறம் அல்லது இலாமையால்,
ஏற்றம் அல்லது, இழிதகவு இல்லையே.


கோசல நாட்டில் எவரிடமும் ஒரு குற்றமும் இல்லாமையால் கூற்றுவனது கொடுமை அந்நாட்டில் இல்லை அந்நாட்டு மக்களின் மனச் செம்மையால் சினம் அந்நாட்டில் இல்லை நல்ல அறச்செயல் செய்வதை தவிர வேறு எச்செயலும் இல்லையாதலால் மேன்மையைத் தவிர எவ்வகையான இழிவான கீழ்மை அந்நாட்டில் இல்லை.

நெறி கடந்து பரந்தன, நீத்தமே;
குறி அழிந்தன, குங்குமத் தோள்களே;
சிறிய, மங்கையர் தேயும் மருங்குலே;
வெறியவும், அவர் மென் மலர்க் கூந்தலே.

செல்லும் வழி கடந்து பரந்து செல்வது அந்த நாட்டில் வெள்ளமேயாம். அடையாளம் அழிந்தவை அந்த நாட்டு மகளின்குங்குமம் அணிந்த தோள்களேயாம். அங்குச் சிறியவை பெண்களின் மெல்லிய இடைகளேயாம் மணம்உடையவை அந்த நாட்டுப் பெண்களின் மலர்சூடிய கூந்தலேயாம்.

பல் வகைப் புகைகள்

அகில் இடும் புகை, அட்டில் இடும் புகை, நகல் இன் ஆலை நறும் புகை, நான் மறை புகலும் வேள்வியில் பூம்புகையோடு அளாய், முகிலின் விம்மி, முயங்கின எங்கணும்.

அகில் கட்டைகளை இடுவதாலுண்டாகும் புகையும், சமையல் அறைகளில் உண்டாகும் புகையும், கரும்பாலைகளில் தோன்றும் புகையும், நான்கு மறைகளைப் புகன்று அந்தணர்கள் புரியும் வேள்வித் தீயில் தோன்றும் அழகிய புகையோடு கலந்து மேகங்களைப் போல மிகுந்து எங்கும் பரந்திருந்தன.

மகளிரின் அங்கம் போன்ற இயற்கை எழில்

இயல் புடைபெயர்வன, மயில்; மணி இழையின்
வெயில் புடைபெயர்வன் மிளிர் முலை; குழலின்
புயல் புடைபெயர்வன, பொழில்; அவர் விழியின்
கயல் புடைபெயர்வன, கடி கமழ் கழனி.

மயில்கள் அந்நாட்டுப் பெண்களின் சாயலைப் பெற்று நடமாடுகின்றன. அப்பெண்களின் தனங்களில் அணிமணிகள் பதித்துச் செய்யப்பட்ட அணிகலங்களைப் போல வெயில் எங்கும் ஒளி வீசின. அப்பெண்களது கூந்தலைப் போல மேகங்கள் சோலைகளில் சஞ்சரித்தன. அவர்களது கண்களைப் போல கயல் மீன்கள் மலர் மணம் கமழும் வயல்களிலே புரள்வனவாமே.

இடை இற, மகளிர்கள், எறி புனல் மறுகக்
குடைபவர், துவர் இதழ் மலர்வன, குமுதம்;
மடை பெயர் அனம் என மட நடை, அளகக்
கடைசியர் முகம் என மலர்வன, கமலம்.

இடை ஒடிவது போலத் தோன்றும் பெண்கள் அலையடிக்கும் நீர் கலங்க நீராடுபவர்களின் பவளம் போன்ற சிவந்த உதடுகளைப் போல குமுத மலர்கள் மலர்வனவாகும். நீர்மடைகளில் வாழும் அன்னங்களைப் போல மெல்லிய நடையையும், அழகிய கூந்தலையும்உடைய அந்நாட்டு உழத்தியரின் முகம் போல தாமரை மலர்கள் மலர்வனவாகும்.






























0 கருத்துகள்:

கருத்துரையிடுக