பால காண்டத்தில் நகரப் படலத்தின் தொடர்ச்சி........

கொடிகள் பறக்கும் அழகு

அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின,
முகிலொடு வேற்றுமை தெரிகலா, முழுத்
துகிலொடு நெடுங் கொடிச் சூலம் மின்னுவ்-
பகல் இடு மின் அணிப் பரப்புப் போன்றவே.

அகிலின் செழுமையான புகை மாளிகை எங்கும் கலந்தவைகளாய், மேகத்துடன் வேற்றுமை அறிய முடியாத பெரிய கொடிகளுடன் நீண்ட கொடி மரங்களின் நுனியில் நாட்டப்பட்ட சூலங்கள் ஒளிர்பவை, ஒளி வீசும் மின்னல் வரிசையின் பரப்பை ஒத்திருந்தன.

துடி இடைப் பணை முலைத் தோகை அன்னவர்
அடி இணைச் சிலம்பு பூண்டு அரற்று மாளிகைக்
கொடியிடைத் தரள வெண் கோவை சூழ்வன்-
கடியுடைக் கற்பகம் கான்ற மாலையே.

உடுக்கை போன்ற இடையினையும், பருத்த தனங்களையும் உடைய மயில் போன்ற சாயலை உடைய மகளிர், தங்கள் இரு கால்களிலும் சிலம்பு அணிந்து அவை ஒலிக்கும்படி நடக்கும் மாளிகைகளிலே கொடிகளுக்கு இடையில் முத்து மாலைகள் தொங்க விடப்பட்டுள்ளவை, மணம் மிக்க கற்பக மரங்களில் பூத்த மாலைகளை ஒத்திருந்தன.

காண் வரு நெடு வரைக் கதலிக் கானம் போல்,
தாள் நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன்
வாள் நனி மழுங்கிட மடங்கி, வைகலும்
சேண் மதி தேய்வது, அக் கொடிகள் தேய்க்கவே.

பெரிய மலைகளில் காணப்படும் வாழை மரங்களை உடைய தோப்பைப் போல கொடிமரங்கள் நீண்ட கொடிகளின் தொகுதி மிகுந்துள்ளன. வானத்திலுள்ள சந்திரன் தன் ஒளிமிக மழுங்கி வளைந்து நாள்தோறும் தேய்ந்து போவது அந்த கொடிகள் உராய்வதன் காரணமாகத் தான்.

மாளிகைகளின் ஒளிச் சிறப்பும் மணமும்

பொன் திணி மண்டபம் அல்ல, பூத் தொடர்
மன்றுகள்; அல்லன மாட மாளிகை;
குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம்;
முன்றில்கள் அல்லன முத்தின் பந்தரே.

பொன்னால் கட்டிய மண்டபம் அல்லாதவை மலர்களால் அமைந்த மண்டபங்களாம். பலர் கூடுமிடமாகக் கட்டிய பொது மன்றங்கள் அல்லாதவை மேன்மாடியோடு அமைந்த மாளிகைகளாம். செய் குன்றுகள் அல்லாதவை இரத்தினங்களைக் கொண்டு அமைத்த முற்றங்களாம். முற்றங்கள் அல்லாதவை முத்துப் பந்தல்களேயாகும்.

மின் என, விளக்கு என, வெயிற் பிழம்பு என,
துன்னிய தமனியத் தொழில் தழைத்த அக்
கன்னி நல் நகர் நிழல் கதுவலால் அரோ,
பொன்னுலகு ஆயது, அப் புலவர் வானமே!

உயர்ந்த பொன்னால் தொழில் திறம் அமைய கட்டப் பட்ட அந்த அழிவில்லாத மா நகரின் மின்னலைப் போலவும், விளக்கின் ஒளியினைப் போலவும் சூரியக் கதிர்களைப் போலவும் உள்ள ஒளி தன் மீது படுவதனால் அந்தத் தேவருலகு பொன் உலகாயிற்று.

எழும் இடத்து அகன்று, இடை ஒன்றி, எல் படு
பொழுதிடைப் போதலின், புரிசைப் பொன் நகர்,
அழல் மணி திருத்திய அயோத்தியாளுடை
நிழல் எனப் பொலியுமால்-நேமி வான் சுடர்.

வட்ட வடிவமாக வானில் ஒளிரும் சூரியன் உதிக்கின்ற காலத்திலே கிரணங்கள் விரிந்தும் நடுப்பகலில் மிக்கும். மாலையில் மறையும் காலத்திலே மீண்டும் கிரணங்கள் மறைந்து போவது தீயைப் போல ஒளிரும் செந்நிறமான மாணிக்கங்களை ஒழுங்காக அமைத்த வட்டமான பொன்னால் அமைந்த மதில் உடைய அந்த நகரம் அயோத்தியாகிய பெண்ணினது நிழலைப் போலக் கதிரவன் விளங்கும்.

ஆய்ந்த மேகலையவர் அம் பொன் மாளிகை
வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய்த்
தோய்ந்த மா கடல் நறுந் தூபம் நாறுமேல்,
பாய்ந்த தாரையின் நிலை பகரல் வேண்டுமோ?

நுட்ப வேலைப்பாடு அமைந்த மேகலை அணிந்த மகளிர் தமது கூந்தலுக்கு மணமூட்ட, மாளிகைகளிலே எழுப்பிய கரிய அகிற் புகையை உண்ட மேகங்கள் சென்று படிந்த அந்தப் பெரிய கடலும் அகிலின் நறுமணம் கமழும், என்றால மேகங்களிலிருந்து கீழே விழும் மழைத் தாரையின் தன்மையை அதுவும் அகில் மணம் கமழ்கிறது எனச் சொல்லவா வேண்டும்?

ஆடலும் பாடலும்

குழல் இசை மடந்தையர் குதலை, கோதையர்
மழலை,-அம் குழல் இசை; மகர யாழ் இசை,
எழில் இசை மடந்தையர் இன் சொல் இன் இசை,
பழையர்தம் சேரியில் பொருநர் பாட்டு இசை.

கூந்தல் வாரி முடிக்கமுடியாத நிலையில் உள்ள இளம் பெண்களின் குதலைச் சொற்கள் அழகிய குழலோசையை ஒத்திருக்கும். மங்கைப்பருவ மகளிரின் மழலை மொழிகள் மகர யாழின் இசையை ஒத்திருக்கும். வனப்பு பொருந்திய பெண்களது இனிய சொற்களகிய இன்னிசை, கள் விற்கும் பழையர்களின் சேரியிலே கூத்தர்கள் பாடும் இசையை ஒத்திருக்கும்.

கண்ணிடைக் கனல் சொரி களிறு, கால் கொடு
மண்ணிடை வெட்டுவ் வாட் கை மைந்தர்தம்
பண்ணைகள் பயில் இடம் குழி படைப்பன்
சுண்ணம் அக் குழிகளைத் தொடர்ந்து தூர்ப்பன.

கோபத்தால் கண்களிலே நெருப்பைச் சொரியும் ஆண் யானைகள் கால்களால் நிலத்தை வெட்டுவனவாம். பார்ப்பவர் விரும்பும் அழகிய இளைஞர்களின் விளையாட்டுகள் நடைபெறும் இடங்கள் குழிகளை உடையனவாம். அந்தக் குழிகளை அவ்விளைஞர் அணிந்த வாசனைப் பொடிகள் தூர்ப்பனவாகும்.

பந்துகள் மடந்தையர் பயிற்றுவாரிடைச்
சிந்துவ முத்தினம்; அவை திரட்டுவார்
அந்தம் இல் சில தியர்; ஆற்ற குப்பைகள்,
சந்திரன் ஒளி கெட, தழைப்ப, தண் நிலா.

பந்தாடுபவராகிய இளம் பெண்களிடமிருந்து (அவரது அணிகலங்களிலிருந்து) முத்துக்கள் சிந்துகின்றன அம்முத்துக்களைச் சேகரித்துச் சேர்க்கும் அளவில்லாத பணிப் பெண்கள் குவித்த அந்த முத்துக் குவியல்கள் சந்திரனது ஒளியும் குறையுமாறு குளிர்ந்த நிலா ஒளி தழைப்பனவாம்.

அரங்கிடை மடந்தையர் ஆடுவார்; அவர்
கருங் கடைக் கண் அயில் காமர் நெஞ்சினை
உருங்குவ் மற்று, அவர் உயிர்கள் அன்னவர்
மருங்குல்போல் தேய்வன் வளர்வது, ஆசையே.

நடன அரங்குகளிலே பெண்கள் நடனம் ஆடுவார்கள். அவர்களின் கருமையான கடைக்கண்களாகிய வேல்கள் காதல் மிக்க ஆடவர்களின் மனத்தை உருக்குவனவாம். பின்னும் அவ்வாடவரின் உயிர்கள் அப்பெண்களின் இடைகளைப் போல மெலிவனவாகும். அந்த மைந்தர்களுக்கு அம்மகளிரின் மீது ஆசை பெருகுவதாகும்.

பொழிவன சோலைகள் புதிய தேன் சில்
விழைவன தென்றலும் மிஞிறும் மெல்லென
நுழைவன் அன்னவை நுழைய, நோவொடு
குழைவன, பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையே.

சில சோலைகள் புத்தம் புதிய தேனைச் சொரிவன அத்தேனை விரும்பி தென்றலும் வண்டும் மெல்ல அச் சோலைகளில் நுழைவனவாம்.அவை நுழைய தலைவனைப் பிரிந்த மகளிரின் (காமத்தால்) கொதிக்கும் தனங்கள் வருத்தத்துடன் மெலிவனவாயின.

இறங்குவ மகர யாழ் எடுத்த இன் இசை
நிறங் கிளர் பாடலான் நிமிர்வ் அவ்வழி
கறங்குவ வள் விசிக் கருவி; கண் முகிழ்த்து
உறங்குவ, மகளிரோடு ஓதும் கிள்ளையே.

மகர யாழிலே எடுத்த (விரலாலே நெருடி கவர்ந்தெடுக்கப்பட்ட) இனிய இசையொலிகள் உள்ளக் கிளர்ச்சி தரும் பாடல்கள் காரணமாக வாய்ப்பாட்டோடு யாழ் இசை நலிந்தொலிப்பன, எடுத்தொலிப்பன. அந்த முறையில் வார் கட்டிய கருவியாகிய முழவுகள் ஒலிப்பன. அந்த இசையைக் கேட்டு பெண்களோடு பேசும் கிளிகள் கண்ணை மூடிக் கொண்டு உறங்குவனவாம்.

மங்கையரின் அழகு மேனி

குதை வரிச் சிலைநுதல் கொவ்வை வாய்ச்சியர்
பதயுகத் தொழில்கொடு, பழிப்பு இலாதன
ததை மலர்த் தாமரை அன்ன தாளினால்,
உதைபடச் சிவப்பன, உரவுத் தோள்களே.

நாண் பூட்டிய வரியமைந்த வில் போன்ற நெற்றியையும், கோவைப் பழம் போன்ற வாயையும் உடைய பெண்களின் இரண்டு பாதங்களுக்கும் செம்பஞ்சு ஊட்டுதலாகிய தொழிலைக் கொண்டு பிறரால் பழித்துக் கூற இயலாதனவாகிய நெருங்கிய இதழ்களை உடைய தாமரை போன்ற பாதங்களால் உதை பட்டதனாலே ஆண்களின் வலிமை மிக்க தோள்கள் சிவந்து காணப்படும். (ஊடலால் தலைவி, தலைவனைக் காலால் உதைப்பதுண்டு. அதனால் அத்தலைவனது வலிய தோள்கள் சிவந்தன என்கிறார்.)

பொழுது உணர்வு அரிய அப் பொரு இல் மா நகர்த்
தொழு தகை மடந்தையர் சுடர் விளக்கு எனப்
பழுது அறு மேனியைப் பார்க்கும் ஆசைகொல்,
எழுது சித்திரங்களும் இமைப்பு இலாதவே?

பொழுதை அறிவதற்கு அரிய அந்த ஒப்பற்ற பெருநகரில் உள்ள கற்பின் சிறப்பால் எல்லோரும் வணங்கத்தக்க பெருமையுள்ள பெண்களது ஒளி விளக்கு போன்ற, குற்றம் எதுவுமின்றித் திகழும் உடம்பினை பார்க்க விரும்பும் ஆசையால் தானே எழுதிய ஓவியங்களும் கண்களை இமைக்காதனவாய் உள்ளன.

தணி மலர்த் திருமகள் தங்கு மாளிகை
இணர் ஒளி பரப்பி நின்று இருள் துரப்பன,
திணி சுடர் நெய்யுடைத் தீ விளக்கமோ?
மணி விளக்கு; அல்லன மகளிர் மேனியே.

குளிர்ந்த தாமரைப் பூவில் வாழும் இலக்குமி தேவி தங்கியிருக்கும் அயோத்தி நகர மாளிகைகள் மிக்க ஒளி வீசி நின்று இருளை ஓட்டுபவை செறிந்த ஒளியுடைய நெய் விளக்குகளின் விளக்கமோ மணிகளின் ஒளியோ அல்ல. அந்நகரத்து மகளிரின் மேனி ஒளியே.

மதங்கியரின் ஆடல் பாடல்

பதங்களில், தண்ணுமை, பாணி, பண் உற
விதங்களின், விதி முறை சதி மிதிப்பவர்
மதங்கியர்; அச் சதி வகுத்துக் காட்டுவ
சதங்கைகள்; அல்லன புரவித் தார்களே.

மத்தள ஒலி, தாள ஓசை, பாட்டு ஒலி இவைகளுக்குப் பொருந்த நாட்டிய நூல் முறைப்படி பல விதங்களாக பாதங்களால் சதிபெற வைத்து நடனம் ஆடுபவர்கள், ஆடல் பாடல் வல்ல பெண்கள் ஆவர். அந்தத் தாளச் சதியை விவரித்துக் காட்டுபவை அப்பெண்கள் கால்களில் அணிந்துள்ள சதங்கைகளும், அவ்வாறு ஆடுகின்ற குதிரைகளின் கால்களுமே.

மாந்தரின் மகிழ்ச்சி

முளைப்பன முறுவல்; அம் முறுவல் வெந் துயர்
விளைப்பன் அன்றியும், மெலிந்து நாள்தொறும்
இளைப்பன நுண் இடை; இளைப்ப, மென் முலை
திளைப்பன, முத்தொடு செம் பொன் ஆரமே.

அந்நகரத்துப் பெண்களின் முகத்திலே எப்போதும் புன்சிரிப்பு தொன்றுவன. அந்த புன்சிரிப்பு, அப்பெண்கள்பால் காதல் கொண்டஆடவர்க்குக் கொடிய துன்பத்தை உண்டாக்கும். அல்லாது, அம்மகளிரின் சிறிய இடைகள் நாள்தோறும் மெலிந்து இளைப்பனவாம் அவர்களது மெல்லிடை இவ்வாறு இளைக்க அம்மகளிரது மென்மையான தனங்கள் முத்து வடங்களும் பொன்னரி மாலைகளும் பூண்டு திளைப்பனவாகும்.

தழல் விழி ஆளியும் துணையும் தாழ் வரை
முழை விழை, கிரி நிகர் களிற்றின் மும் மத
மழை விழும்; விழும்தொறும், மண்ணும் கீழ் உறக்
குழை விழும்; அதில் விழும், கொடித் திண் தேர்களே.

நெருப்பென விழிக்கும் கண்களை உடைய ஆண் சிங்கங்களும் துணையான பெண்சிங்கங்களும் தங்குவதற்கு ஏற்றனவாகிய மலைக் குகைகளை விரும்பும். மலை போன்ற யானைகளின் மதநீர் மழை பொழியும். அவ்வாறு மழை சொரியும் தோறும் நிலமும் ஆழமாகுமாறு சேறாகும். அந்தச் சேற்றில் கொடிகளை உடைய வலிய தேர்கள் புதையுண்ணும்.

ஆடு வாம் புரவியின் குரத்தை யாப்பன,
சூடுவார் இகழ்ந்த அத் தொங்கல் மாலைகள்;
ஓடுவார் இழுக்குவது, ஊடல் ஊடு உறக்
கூடுவார் வன முலை கொழித்த சாந்தமே.

மாலை சூடிய மகளிர் வாடிவிட்டன என்று இகழ்ந்து எறிந்து விட்ட மாலைகள் ஆடுகின்ற நெடிய குதிரைகளின் குளம்புகளைப் பிணிப்பனவாகும். ஊடல் இடையிலே நிகழ, பின் ஆடவருடன் கூடி மகிழும் மகளிரின் அழகிய தனங்களிலிருந்து வழித்து வீதியில் எறிந்த சந்தனத் தேய்வை அத்தெருவில் ஓடுபவர்களை வழுக்கி விழச் செய்வனவாம்.

இளைப்ப அருங் குரங்களால், இவுளி, பாரினைக்
கிளைப்பன் அவ் வழி, கிளர்ந்த தூளியின்
ஒளிப்பன மணி; அவை ஒளிர, மீது தேன்
துளிப்பன, குமரர்தம் தோளின் மாலையே.

குதிரைகள் வீதியிலே ஓடும்பொழுது தமது குளம்புகளால் நிலைத்தைக் கிளறுகின்றன. அங்குக் கிளர்ந்து மேலெழுந்த புழுதியினாலே அக்குதிரைகளின் மீது ஏறிவரும் வீரர்கள் அணிந்த மணிகள் மறைவன ஆயின. அம் மணிகள் மறுபடியும் ஒளிவீசுமாறு வீரர்கள் தோள்களில் அணிந்த மாலைகள் தேன் துளிகளைச் சொரிந்தன.

விலக்க அருங் கரி மதம் வேங்கை நாறுவ்
குலக் கொடி மாதர் வாய் குமுதம் நாறுவ்
கலக் கடை கணிப்ப அருங் கதிர்கள் நாறுவ்
மலர்க் கடி நாறுவ, மகளிர் கூந்தலே.

விலக்குவதற்கு அரிய யானைகளின் மதநீர் வேங்கை மலர்களைப் போல மணக்கிறது.உயர்குடியில் பிறந்த கொடியை ஒத்த மகளிரின் வாய்கள் குமுத மலர் போல் விளங்குகின்றன. அம்மகளிரின் அணிகலன்களில் அளவிடற்கு அரிய ஒளிக் கதிர்கள் எங்கும் ஒளிர்கின்றன. அந்த மகளிரின் கூந்தல் மலர் மணம் கமழ்கிறது.

கோவை இந் நகரொடு எண் குறிக்கலாத அத்
தேவர்தம் நகரியைச் செப்புகின்றது என்?
யாவையும் வழங்கு இடத்து இகலி, இந் நகர்
ஆவணம் கண்டபின், அளகை தோற்றதே!

சிறந்த நகரங்களின் வரிசையிலே அயோத்தி நகருடன் சேர்ந்து எண்ணப்படாத அந்தத் தேவர் நகரமான அமராவதியை இந்த நகருக்கு இணையோ, அல்லவோ என்று எடுத்துச் சொல்வது எதற்கு?எல்லா வளங்களையும் தரும் விதத்திலே வேறுபட்டு விளங்குவதோடு இந்த நகரத்துக் கடைத் தெருவைப் பார்த்த பிறகு செல்வம் மிக்க தென்னும் அளகாபுரியே தோல்வியுற்றது.

அதிர் கழல் ஒலிப்பன் அயில் இமைப்பன்
கதிர் மணி அணி வெயில் கால்வ் மான்மதம்
முதிர்வு உறக் கமழ்வன் முத்தம் மின்னுவ்
மதுகரம் இசைப்பன்-மைந்தர் ஈட்டமே.

அந்நகரத்தில் அதிர்கின்ற வீரக் கழல்களின் ஒலி ஆர்ப்பரித்து ஒலிப்பனவாக. வேல் முதலிய படைக்கலங்கள் ஒளிர்வனவாக. ஒளிமிக்க மணிகளாலான அணிகலன்கள் எங்கும் ஒளிவீசுபவையாக. கத்தூரி மிகுதியும் கமழ்வதாக. அணிகலன்களில் அமைந்த முத்துக்கள் மின்னல் போல ஒளிர்வன. வண்டுகள் பண் பாடுவனவாக. இவ்வாறாக ஆடவர் கூட்டம் விளங்கியது.

வளை ஒலி, வயிர் ஒலி, மகர வீணையின்
கிளை ஒலி, முழவு ஒலி, கின்னரத்து ஒலி,
துளை ஒலி, பல் இயம் துவைக்கும் சும்மையின்
விளை ஒலி, -கடல் ஒலி மெலிய, விம்முமே.

அந்த நகரமெங்கும சங்குகளின் ஓசை, கொம்புகளின் ஓசை, மகர யாழ் இனங்களின் ஓசை, மத்தள ஓசை, கின்னர ஓசை, துளைக் கருவிகளான புல்லாங்குழல் முதலியவைகளின் ஓசை மற்றும் பலவகை வாத்தியங்கள் முழக்கும் ஆரவாரத்தின் விளைவாக உண்டாகும் ஓசை ஆகிய இவ்வோசைகள் எல்லாம் கடல் முழக்கமும் மெலியும்படி ஒலிக்கும்.

மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம்,
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம்,
உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம்,
பன்ன அருங் கலை தெரி பட்டி மண்டபம்.

மன்னர் மன்னனாகிய அயோத்தி வேந்தனுக்கு அடங்கிய சிற்றரசர்கள் செலுத்தும் கப்பத்தை எண்ணி அளவிடும் மண்டபங்களும், அன்னம் போன்ற நடையையுடைய நடன மாதர்கள் நடனம் ஆடும் மண்டபங்களும், நினைப்பதற்கும் அரியனவான சிறந்த வேதங்களை வல்லோர் ஓதும் மண்டபங்களும் சிறப்பித்துப் பேசுவதற்கும் அரியனவான பல கலைகளையும் அறிஞர்கள் ஆராயும் பட்டி மண்டபங்களும் அயோத்தி நகரெங்கும் இருந்தன.

இரவியின் சுடர் மணி இமைக்கும், தோரணத்
தெரிவினின் சிறியன, திசைகள்; சேண் விளங்கு
அருவியின் பெரியன, ஆனைத் தானங்கள்;
பரவையின் பெரியன, புரவிப் பந்தியே.

அந்த நகரத்துத் தோரணங்கள் சூரியன் போன்ற சுடர்மிகு மணிகளால் ஒளிரும். நெடிய வீதிகளைவிடத் திசைகள் சிறியனவாம். மலையின் மிக உயர்ந்தே இருக்கும் அருவியை விட யானையின் மதநீர் பெரியதாகும். கடல்களை விடவும் பெரியது அந்நகரத்தில் குதிரைகள் கட்டும் இடம்.

சூளிகை மழை முகில் தொடக்கும் தோரண
மாளிகை மலர்வன, மகளிர் வாள் முகம்;
வாளிகள் அன்னவை மலர்வ் மற்று அவை,
ஆளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே.

அந் நகரத்து மாளிகைகளின் உச்சி மிக உயர்ந்திருப்பதால் மேகத்தைப் பிணிக்கும். தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு விளங்கும் மாளிகைகளிலெல்லாம் மகளிரின் ஒளிமிகு முகங்கள் மலர்ந்து பொலிவனவாகும். அம்முகங்களில் அம்புகள் விளங்குகின்றன (கண்கள்). மற்று. அவ்வம்புகள் சிங்கத்தை ஒத்த ஆடவர்களின் மார்பில் ஆழ்வனவாம்.

மன்னவர் கழலொடு மாறு கொள்வன,
பொன் அணித் தேர் ஒலி, புரவித் தார் ஒலி;
இன் நகையவர் சிலம்பு ஏங்க, ஏங்குவ,
கன்னியர் குடை துறைக் கமல அன்னமே.

அரசர்களின் வீரக் கழல்களின் ஒலியுடன் மாறு கொண்டு ஒலிப்பவை பொன்னால் அலங்கரிக்கப்பட்ட தேர்களின் ஒலியும், குதிரைப் படைகளின் ஒலியுமே ஆகும். இனிய சிரிப்பு உடைய மகளிரின் சிலம்புகள் ஒலிக்கும்படியாக நீராடும் நீர்த்துறையில் வாழும் தாமரையில் உள்ள அன்னங்களே ஏங்கு வனவாம்.

நகர மாந்தரின் பொழுது போக்குகள்

ஊடவும், கூடவும், உயிரின் இன் இசை
பாடவும், விறலியர் பாடல் கேட்கவும்,
ஆடவும், அகன் புனல் ஆடி அம் மலர்
சூடவும், பொழுது போம்-சிலர்க்கு, அத் தொல் நகர்.

அந்தப் பழமை வாய்ந்த நகரத்திலே வாழும் சிலர்க்கு காதலர்களோடு ஊடல் கொள்ளும் ஊடல் தீர்ந்து கூடி இன்புற்று மகிழவும், உயிரினும் சிறந்ததான இனிய இசை பாடி மகிழவும், இசையில் வல்ல விறலியர்களைப் பாடச்செய்து, அதனைக் கேட்கவும் இசைக்கேற்ப நடனம் ஆடவும், இடமகன்ற நீர்நிலைகளிலே நீராடவும், அழகிய மலர்களை அணிந்து மகிழவும் ஆகிய செயல்களால் பொழுது போகும்.

முழங்கு திண் கட கரி மொய்ம்பின் ஊரவும்,
எழும் குரத்து இவுளியடு இரதம் ஏறவும்,
பழங்கணோடு இரந்தவர் பரிவு தீர்தர
வழங்கவும், பொழுது போம்-சிலர்க்கு, அம் மா நகர்.

பிளறி முழக்கமிடும் வலிமைமிக்க மத யானைகளின் மீதுதமது மிகுந்த வலிமையால் ஏறி ஊர்ந்து சென்றும், எழுகின்ற ஆரவாரமுடைய குதிரைகளோடு தேர்களில் ஏறி ஊர்ந்து சென்றும், வறுமைத் துன்பத்தோடு வந்து இரந்தவரது துன்பம் நீங்கிட வேண்டிய பொன்னும் வாரி வழங்கியும் அந்தப் பெரு நகரில் வாழும் சிலர்க்குப் பொழுது போகும்.

கரியடு கரி எதிர் பொருத்தி, கைப் படை
வரி சிலை முதலிய வழங்கி, வால் உளைப்
புரவியில் பொரு இல் செண்டு ஆடி, போர்க் கலை
தெரிதலின், பொழுது போம்-சிலர்க்கு, அச் சேண் நகர்.

யானையோடு யானையை எதிர்த்துப் போர் புரியவிட்டு கையில் உள்ள படைகளான கட்டமைந்த வில் முதலியவைகளைப் பயின்றும், நீண்ட பிடரி மயிரை உடைய குதிரைகளின் மீது ஏறிக்கொண்டு, ஒப்பற்ற ‘செண்டு’ என்ற பந்தாடியும், போருக்குரிய கலைகளைத் தெரிந்து பயின்றும், அந்தச் சிறந்த நகரத்தில் மற்றும் சில பேருக்குப் பொழுது போகும்.

நந்தன வனத்து அலர் கொய்து, நவ்விபோல்
வந்து, இளையவரொடு வாவி ஆடி, வாய்ச்
செந் துவர் அழிதரத் தேறல் மாந்தி, சூது
உந்தலின் பொழுது போம்-சிலர்க்கு, அவ் ஒள் நகர்.

நந்தனவனம் சென்று மலர்ந்த மலர்களைப் பறித்தும், பெண்மானைப் போல வந்து தம்மை ஒத்த இள மகளிருடன் பொய்கையில் நீராடியும், தமது வாயின் பவள நிறம் அழியுமாறுதேனைப் பருகியும், தாயமாடும் முதலிய விளையாட்டுகள் ஆடியும் அந்த ஒளிமிக்க நகரிலே வாழும் மற்றும் சிலருக்குப் பொழுதுபோகும்.

கொடிகளும், தோரண வாயில் முதலியவும்

நானா விதமா நளி மாதிர வீதி ஓடி,
மீன் நாறு வேலைப் புனல் வெண் முகில் உண்ணு மாபோல்,
ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள் மீப் போய்,
வான் ஆறு நண்ணி, புனல் வற்றிட நக்கும் மன்னோ.

அந்நகரின் குறைவில்லாத மாடங்களின் மீது ஆடுகின்ற கொடிகள் நாலாவிதமாகவும் பறந்து பெரிய வான வீதியிலே ஓடி, மீன் நாறும் கடல் நீரினை வெண்மை நிறமுடைய மேகங்கள் பருகுவது போல மேலே சென்று வானாறாகிய ஆகாய கங்கையை அடைந்து அதன் தண்ணீர் வற்றும்படி நக்கும்.

வன் தோரணங்கள் புணர் வாயிலும், வானின் உம்பர்
சென்று ஓங்கி, 'மேல் ஓர் இடம் இல்' எனச் செம் பொன் இஞ்சி-
குன்று ஓங்கு தோளார் குணம் கூட்டு இசைக் குப்பை என்ன-
ஒன்றோடு இரண்டும், உயர்ந்து ஓங்கின, ஓங்கல் நாண.

வன்மையான தோரணங்கள் பொருந்திய வாயில்களும், செம்பொன்னால் அமைந்த மதில்கள் ஒன்றோடிரண்டாகிய மூன்றும் வானத்தின் மேலே சென்று உயர்ந்து, அதற்கு மேலே செல்ல ஒரு இடமும் இல்லை என்பதால் மலை போன்ற தோள்களை உடைய அந்நகரத்து ஆண்களின் சிறந்த குணங்களுடன் கூடிய நட்புள்ளம் புகழ்த் தொகுதி ஆகிய நல்ல பண்புகள் உயர்ந்திருப்பது போல, வாயில் மதில் ஆகியவைகளின் உயரத்தைக் கண்டு மலையும் நாணுமாறு உயர்ந்து விளங்கின.

காடும், புனமும், கடல் அன்ன கிடங்கும், மாதர்
ஆடும் குளனும், அருவிச் சுனைக் குன்றும், உம்பர்
வீடும், விரவும் மணப் பந்தரும், வீணை வண்டும்
பாடும் பொழிலும், மலர்ப் பல்லவப் பள்ளி மன்னோ!

அந்நகரைச் சூழ்ந்த காடுகளிலும் கொல்லைகளிலும் கடல் போன்ற அகழியின் ஓரங்களிலும் பெண்கள் நீர் விளையாடும் தடாகங்களிலும் அருவிகளையும், சுனைகளையும் உடைய மலைகளிலும் மேல், வீடுகளிலும் பற்பல இடங்களிலும் விரவியுள்ள முத்துப் பந்தர்களிலும்,வீணை போல வண்டுகள் ரீங்காரம் செய்யும் சோலைகளிலும், மலர்களாலும் தளிர்களாலும் அமைந்துள்ள படுக்கைகள் நிலைத்திருக்கும்.

செல்வமும் கல்வியும் சிறந்த அயோத்தி

தௌ; வார் மழையும், திரை ஆழியும் உட்க, நாளும்,
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள்-
கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை; யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ.

தெளிந்த நீரைத் தரும் மேகங்களும், அலைகளை உடைய கடலும், அஞ்சும்படி நாள்தோறும் தோல் வாரினால் கட்டிய பேரிகைகள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்நகரில் வாழ்கின்ற ஐயறிவே உடைய மாக்களிடையே கூட களவு செய்பவர் இல்லாமையால் பொருள்களைக் காவல் காப்பவரும் இல்லை. எதையும் யாசிப்பவர் இல்லையாதலால் கொடையாளிகளும் அந்த நகரத்தில் இல்லை.

கல்லாது நிற்பார் பிறர் இன்மையின், கல்வி முற்ற
வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இல்லை;
எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே,
இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ.

நல்ல கலை நூல்களைப் படிக்காது நிற்பவர்களாகிய வீணர்கள் இல்லாமையாலே கல்வியில் முற்றும் வல்லவர் என்று அங்கு எவரும் இல்லை. அக்கல்வித் துறைகளில் வல்லவரும். அஃது இல்லாதவரும் இல்லை. அந்நகரில் வாழ்பவர்கள் எல்லோரும் கல்வி, பொருள் ஆகிய எல்லாச் செல்வமும் அடைந்திருப்பதாலே அந்த நகரத்திலே இல்லாதவரும் இல்லை, உடையவர்களும் இல்லை.

ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து, எண் இல் கேள்வி
ஆகும் முதல் திண் பணை போக்கி, அருந் தவத்தின்
சாகம் தழைத்து, அன்பு அரும்பி, தருமம் மலர்ந்து,
போகங் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே.

கல்வி என்னும் ஒரு வித்து ஒப்பற்றதாக முளைத்து மேலெழுந்து, எண்ணற்ற பல்நூல் கேள்வியாகிய முதன்மையும், வலிமையும் வாய்ந்த கிளைகளை எங்கும் பரவச் செய்து, அரிய தவமாகிய இலைகள் தழைத்து, எல்லா உயிர்களிடமும் செலுத்தும் அன்பாகிய அரும்பு அரும்பி அறச் செயல்களாகிய மலர்கள் மலர்ந்து, இன்ப அநுபவம் என்னும் பழத்தை பழுத்த பழ மரத்தைப் போன்று அந்த அயோத்தி மாநகர் பொலிந்து விளங்கியது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக